இட்லி தோசைக்கு உளுத்தம் பருப்பு அரைக்கும்போது கொஞ்சம் பெருங்காயப் பொடியைச் சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.
✦கறிவேப்பிலைத் துவையலுக்கு உளுத்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து அரையுங்கள். துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
✦சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் நல்லெண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் கொதிக்க
விடுங்கள், காரம் குறைந்துவிடும்.
✦ஆவிவரும் வரை சூடாக்கி பின்னர் குளிரவிட்ட எண்ணெய்யில் ஊறுகாய் போட்டால் எளிதில் பூஞ்சணம் பிடிக்காது.
✦வாழைக்காயைப் ப்ரிட்ஜில் வைக்கும்போது அப்படியே வைக்காமல் இரண்டாக நறுக்கி வைத்தால் கறுக்காமல் அப்படியே புதிது போல் இருக்கும்.
✦மசால்வடை செய்யும்போது மாவு நீர்த்துப் போய்விட்டால் இரண்டு பிரெட் துண்டுகளை மிக்சியில் பொடித்து, மாவுடன் சேர்த்து வடைதட்டினால் வடை ருசி பிரமாதமாக இருக்கும்.
✦பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையோடு சோம்பு சேர்த்து அரைத்துக் கலந்தால் அதன் சுவையே அலாதிதான்.
✦ரவா தோசை மாவில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்தால் தோசை மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.
✦புதினா சட்னி செய்யும்போது, ஒரு தேக்கரண்டி தேங்காய்த் துருவலும், சிறிதளவு வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
✦இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்த்தால் கூடுதல் சுவையாக
இருக்கும்.
✦உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
✦வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் பாத்திரத்தில் வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
✦சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
✦உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
✦ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் ருசியாக இருக்கும்.