கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "சில்லுன்னு ஒரு காதல்' தொடரில் ராஜேஸ்வரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து பலரையும் மிரள வைத்து வருபவர் நடிகை சியாமந்தா கிரண்.
அவர் பகிர்ந்து கொண்டவை:
சின்னத்திரைக்குள் வந்தது எப்படி?
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிப்பதற்கு ஆடிஷன் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். அதில் நாயகியின் தோழியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம்தான் சின்னத்திரைக்குள் வந்தேன். பின்னர், படிப்படியாக இந்தத் துறையில் என் திறமையை வளர்த்துக் கொண்டு பல தொடர்களில் நடித்து முன்னேறினேன்.
நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ?
நான் நடிக்க வந்த தொடக்கத்தில் இருந்தே இதுவரை பல தொடர்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், இடையில் அப்படிப்பட்ட கதாபாத்திரம் அமையவே இல்லை. இப்போது இந்தத் தொடரின் மூலம் மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுவாக, பாஸிட்டிவ் கதாபாத்திரங்களை விட நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில்தான் நம்முடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்ட முடியும். மேலும், நடிப்பு மட்டுமல்லாமல், ஆடை அலங்காரங்களும் முக்கியமானதாக இருக்கும். எனவே, நெகட்டிவ் ரோல் எப்பவுமே பிடிக்கும்.
உங்களது சமையல் குறிப்புகள் சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ளதே....
அம்மாவும், அப்பாவும், பணிபுரிபவர்கள் என்பதால், சிறு வயதிலேயே எனக்கு சமையல் கலையை அறிமுகம் செய்து வைத்துவிட்டார் அம்மா. தற்போது பொதுமுடக்க ஓய்வில் இருந்ததால், எனக்கு தெரிந்த ரெசிப்பிகளை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து சில சமையல் குறிப்புகளை பகிர்ந்தேன். அத்றகு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு ஆச்சரியப்பட வைத்துவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, விதவிதமான சமையல் முறைகளை பதிவேற்றி வருகிறேன்.
மறக்க முடியாத பாராட்டு?
இயக்குநர் கே.பாலசந்தர் சாரின் தயாரிப்பில் உருவான தொடரில் நடிக்கும்போது, "நீ நன்றாக நடிக்கிறாய். எப்போதும் நடிப்பை மட்டும் விட்டு விடாதே' என்றார் அது எப்பவும் என்னால் மறக்க முடியாதது.