சின்னத்திரை மின்னல்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சி சமீபகாலமாக உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
சின்னத்திரை மின்னல்கள்!


மன அழுத்தத்திலிருந்து மீண்டவர்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சி சமீபகாலமாக உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. மற்ற கேம் ஷோக்களைப் போன்று இதிலும் எலிமினேஷன்களும், டாஸ்க்குகளும் இருப்பதே நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்குகிறது. தற்போது, "குக் வித் கோமாளி சீசன் -2' ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷிவாங்கி, கனி, பவித்ரா லட்சுமி, நடிகை ஷகீலா ஆகியோர் போட்டியாளராக இருந்தனர். இந்நிலையில் பலரின் ஃபேவரைட்டாக இருந்த போட்டியாளர் பவித்ரா லட்சுமி சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

இது குறித்து பவித்ரா கூறுவது: ""இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பலரும் தங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதாக கூறுகின்றனர். அது உண்மைதான். இதை அனுபவ பூர்வமாக நான் உணர்ந்துள்ளேன். இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்த நான் தற்போது அதிலிருந்து மீண்டிருக்கிறேன். இது ஒரு அற்புதமான பயணம். எனக்கு அளவில்லாத அன்பையும் ஆதரவையும் வழங்கிய என் அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. "குக் வித் கோமாளி' டீமில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் இதயப் பூர்வ நன்றிகள்'' என தெரிவித்துள்ளார். தற்போது "உல்லாசம்' என்ற மலையாளப் படத்தில் முதல்முறையாக நடித்து வரும் பவித்ரா. விரைவில் தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க உள்ளாராம்.

ரசிகர்களின் வருத்தம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பூவே உனக்காக' தொடரில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்து வந்த பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இத்தொடரில் பூவரசி - கீர்த்தி - கதிர் கதாபாத்திரங்கள்தான் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றனர். இதில் ஜோவிதா கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தொடரின் நாயகனான கதிர் கீர்த்தியை காதலித்த நிலையில், கதிருக்கும் பூவரசிக்கும் ஏற்கெனவே திருமணமாகி விடுகிறது. இருப்பினும், பூவரசி கதிரின் காதலைச் சேர்த்து வைக்க உதவி செய்கிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக, சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில், கீர்த்தி - செல்வம் என்ற கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொள்கிறார். இதனால், கதிர் - பூவரசியும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஜோவிதா மேல்படிப்பு படிக்க செல்வதால் இத்தொடரில் இருந்து விலகுவதாகவும் விரைவில் ரசிகர்களை வேறு ஒரு புரொஜக்டில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com