ஒரு சமயம் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மறைமலை அடிகளார் வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருந்தார். செட்டியார் மிகவும் நகைச்சுவையாக பேசக் கூடியவர்.
மதிய உணவு இடைவேளை வந்தது. மறைமலை அடிகளாரின் துணைவியார் நீலாம்பிகை உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது கதிரேசன் செட்டியார், " கொஞ்சம் ரசம் போடும்மா'' என்றார்.
"தூய தமிழில் சாறுவிடும்மா என்று கூறலாமே'' என்று விளையாட்டாகக் கூறினார் நீலாம்பிகை அம்மையார்.
இதைக்கேட்ட கதிரேசன் செட்டியார், "அதுவும் சரிதான். நியாயம்தான். அம்மா கருப்பாயி கொஞ்சம் சாறு ஊற்றும்மா'' என்றார்.
"நீலாம்பிகை என்ற என் பெயரைக் கருப்பாயி ஆக்கிவிட்டீர்களே ஏன்அப்படி சொன்னீர்கள்'' என்றார்.
"உடனே கதிரேசன் செட்டியார், நீலம் என்பதை தமிழில் "கருப்பு' என்று சொல்கிறோம். அம்பிகை என்பதை தூய தமிழில் "ஆயி' என்று சொல்வார்கள். எனவே, நீலாம்பிகை என்ற உன்னை தூய தமிழில் "கருப்பாயி' என்று சொன்னேன். ரசத்தை "சாறு' என்று சொல்வதைப் போல'' என்றார்.
பண்டிதமணியின் இந்த சமயோசித நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தார்கள்.
- முக்கிமலை நஞ்சன்