கோவை நகரைக் கலக்கி வருபவர் கலைமணி. தடகளத் தாரகை என்று பட்டம் பெற்றிருக்கும் கலைமணி.
சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே குளமங்கலம் என்ற கிராமம் இப்போது கோவையில் வசிக்கிறோம். கணவர் டீக்கடை வைத்திருக்கிறார். எங்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள்.
பள்ளியில் நான் கபடி விளையாடுவதைப் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். புதுக் கோட்டை மாவட்ட டிஸ்மஸ் கபடி கிளப்பில் விளையாடியதுடன், மாநில அளவிலும் கபடி போட்டியில் தேர்வானேன். தேர்வுக் குழுவில் இருந்த மன்சூர் என்பவர் உன்னிடம் ஓடும் திறமை அபாரமாக இருக்கிறது. நீ கண்டிப்பாக பி.டி.உஷா போன்று வருவாய் என்று கூறியது முதல் தடகள போட்டியில் கவனம் செலுத்தினேன்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் எனக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவெடுத்த போது, தேசிய போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி மறுப்பு தெரிவித்தேன். ஆனால் என் கணவர் அப்படி ஒரு சூழல் வரும்போது நான் நிச்சயம் ஆதரிப்பேன், உன் விளையாட்டுக்கு தடையாக இருக்க மாட்டேன் என்று எனக்கு ஆதரவு அளித்தார்.
திருமணத்திற்கு பிறகு 15 வருடங்கள் கணவர், குழந்தைகள் என்று காலம் கடந்தது. ஒருநாள் பேப்பரில் மாரத்தான் போட்டி நடப்பதற்கான விளம்பரம் பிரசுரமாகி இருந்ததை கணவர் காண்பித்தார். போட்டியில் பங்கேற்குமாறும் ஊக்கப் படுத்தினார். போட்டி நடக்கும் இடத்தை தேடிச் சென்றேன். எனது ஓடும் திறமையைப் பார்த்து பயிற்சியில் சேர்த்துக் கொண்டார்கள்.
கோயம்புத்தூரில் நடந்த தேசிசய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றேன். பின்னர் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றேன்.
ஸ்டேட் மீட் கரூரில் நடந்தபோது தங்கப்பதக்கம் வென்றதுடன், மாவட்ட அளவில் பல பதக்கங்களையும் பெற்றிருக்கிறேன்.
2018-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தேன். உயிர் பிழைக்க மாட்டேன் என நினைத்தேன். காலில் அடிபட்டதால் நடக்கவும் முடியவில்லை. 18 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். படுக்கையில் இருந்தபோது பதக்கங்கள், கோப்பைகளை பார்த்து அழுதிருக்கிறேன்.
பீனிக்ஸ் ரன்னர் டீமில் இருந்த அனைவரும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். உடல் நலம் தேறி. பின்னர் நானே வண்டி ஓட்டிக் கொண்டு கிரவுண்டுக்கு சென்றேன். மற்றவர்கள் கொடுத்த உற்சாகத்தாலும், ஊக்கத்தாலும் மீண்டும் ஓடத் தொடங்கினேன்.
மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கங்களை வென்றுள்ளேன். இன்டர்நேஷனல் அளவில் போகவும் ஸ்பான்ஸர் தேவைப்படுகிறது. அது கிடைத்தால் நிச்சயம் இன்னும் பெரிய அளவில் சாதிப்பேன்.