புளித்த தோசை மாவில் சுக்குப் பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.
வற்றல் குழம்பு செய்யும்போது குழம்பை இறக்கிய பின் ஒரு தேக்கரண்டி வறுத்த எள் பவுடர் போட்டால் நல்லெண்ணெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.
வெண்டைக்காய் கறி செய்யும்போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் மொரமொரப்பாய் சுவையாய் இருக்கும். வழவழப்பும் இருக்காது.
ரசத்தை இறக்கி வைத்ததும். ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்துமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். சுவையும் மணமும் எடுப்பாய் இருக்கும்.
குழந்தைகளின் உடல் சத்துக்கு பொட்டுக்கடலை பொடியுடன் சிறிதளவு கசகசாவை வறுத்து பொடி செய்து சேர்த்து கொடுத்து வந்தால் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பியும் சாப்பிடுவார்கள்.
புது மண் பானை வாங்கினால் அதில் முதலில் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை கழுவி விட்டு, கல்லுப்பு போட்டு நீர் ஊற்றி வைத்திருந்து மறுநாள் கழுவிவிட்டு பயன்படுத்தலாம்.
குக்கரின் உட்புறம் வெங்காயத் தோல் , கல்லு உப்பு, எலுமிச்சம் பழத் தோல் ஏதாவது போட்டு நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின்பு தேய்த்தால் குக்கர் உள்ளே இருக்கும் கறை போய்விடும்.
கோதுமை மாவில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து உடனே தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
கேரட்டை பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் ஒரு பிடி தேங்காய்த்துருவல் ஒரு ஏலக்காய் பனை வெல்லம் சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் பசும்பால் கலந்து சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் வயிற்றிலுள்ள கல்லும் கரைந்துவிடும்.