சேலம் மாவட்டம், எம்செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி பிரியா சுவரோவியங்கள் தீட்டுவதில் தனி முத்திரைப் பதித்துள்ளார்.
""விவசாயம் குடும்பத்தில் பிறந்தேன். கணித பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதனால் பள்ளியில் படிக்கும்போது நடைபெற்ற எல்லா ஓவியப் போட்டிகளிலும் கலந்துக் கொள்வேன். பல போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன்.
ஊரடங்கு நேரத்தில் வீட்டில் அதிக நேரம் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது பொழுது போக்காக வீட்டின் சுவரில் ஓவியம் வரைந்தேன்.
அந்த ஓவியம் என் குடும்பத்தாரையும் உறவினர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அவர்களின் பாராட்டுதான் என்னை சுவர் ஓவியங்கள் வரையத் தூண்டியது.
சுமார் நூறு ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன். என் கற்பனையில் தோன்றும் இயற்கைக் காட்சிகள், நான் பார்த்து ரசித்த இடங்கள், பெண் சார்ந்த ஓவியங்கள், கடவுள் சார்ந்த ஓவியங்கள், விலங்குகள், பறவைகள் என்று பல ஓவியங்களை வரைந்திருக்கிறேன்.
எனது ஓவியத்தைப் பார்த்த பலரும் தங்கள் வீட்டிலும் ஓவியம் வரைந்து கொடுக்குமாறு கேட்டார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து கொடுக்கிறேன்.
நமது நாட்டின் நினைவுச் சின்னங்களை கண்டறிந்து வரைய வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும்'' என்கிறார் ஷாலினி பிரியா.