பாலூட்டும் தாய்மார்களா?: இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

பிரசவித்த தாய்மார்கள் தங்கள் சிசுவிற்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான சமாச்சாரம்.
பாலூட்டும் தாய்மார்களா?: இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

பிரசவித்த தாய்மார்கள் தங்கள் சிசுவிற்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான சமாச்சாரம். குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் அக்குழந்தைக்கு அது உணவு மட்டுமல்ல மருந்தும் ஆகிறது. தாயிடமிருந்து, அவரது அரவணைப்பில்,  நேரிடையாக குழந்தையானது தாயின் பாலை உறிஞ்சி குடிப்பதால்,  தாய்க்கும் குழந்தைக்கும் ஆன பந்தமும் அன்பும் வலுப்பெறுகிறது. வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு, குழந்தைக்கு தேவையான சமயங்களில் பாலூட்ட முடிகிறது.

ஆனால் வீட்டில் இல்லாமல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களாக இருக்கலாம், அல்லது அத்தாய் வேலை நிமித்தம் வெளியில் சொல்லும்படியாக இருக்கலாம் அல்லது  குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட சரியான சூழ்நிலை அமையாமல் இருக்கலாம்.  இதுபோன்ற நேரங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு பிரஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலை எடுத்து வைத்து கொடுக்கிறார்கள். இது குறித்த கருத்துகளை,  மருத்துவர் கெüரி மீனா,  (மகப்பேறு மற்றும் மகளிர் நலம், லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை) கூறுவதைப் பார்ப்போம்:

""ப்ரெஸ்ட் பம்ப் உபயோகிக்கும் தாய்மார்களுக்கு நிறைய சந்தேகங்கள் வருவது உண்டு. ப்ரெஸ்ட் பம்ப் எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை கருவியை  நாம் வெளியில் இருந்து வாங்குகிறோம். ஆனால் பிரசவித்த தாய்க்கு இயற்கையாகவே மார்பகங்களில் சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் பாலைச் சுரக்கின்றன.  குழந்தை பால் குடிக்க வாயை வைத்து உறிஞ்சும் பொழுது,  கீழ்ப் பக்கத்தில் இருக்கும் சில செல்கள் சுருங்குகின்றன. இதனால் எப்பொழுதும் மார்புப் பகுதியில் இருக்கும் பாலானது,  சுரப்பதோடு அல்லாமல் பீய்ச்சி அடித்தவாறு குழந்தை வாய்க்கு வருகிறது. இதுதான் இயற்கையிலேயே அமைந்த ப்ரெஸ்ட் பம்ப்.

சாதாரணமாக எல்லோரும் குறிப்பிடும் ப்ரெஸ்ட் பம்ப் என்பது, வெளியிலிருந்து வாங்கி உபயோகப்படுத்தும் ஒரு செயற்கைக் கருவிதான். தாய்மார்கள், தாய்ப்பாலை இக்கருவியின் மூலம் வெளியே எடுத்து, சேகரித்து  வைத்து உபயோகப்படுத்துகிறார்கள்.

தாய்ப்பாலை எந்தெந்த முறைகளில் சேகரிக்கலாம்: தாயானவள் தன் மார்புப் பகுதியில் நீவி விட்டாற் போல் அழுத்தம் கொடுத்து பாலை பீய்ச்சி எடுத்துக் கொள்வது முதலாவது முறை.  இரண்டாவதாக, கருவட்டத்தை முழுவதும் மூடினாற் போல் அமையும் அந்தக் கருவியில் , செயற்கை பம்ப் மூலம் பாலை சேகரிப்பது.  மூன்றாவது எலக்ட்ரானிக் முறை. இது பேட்டரிகளின் உதவிகொண்டு, அதிகமான பவரில், பாலை உறிஞ்சி எடுக்கும் செயற்கை முறை. நான்காவதாக இரண்டு மார்பகங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் பாலை வெளியே எடுக்கக் கூடிய கருவிகளும் கிடைக்கின்றன.

தாய்மார்கள் எந்த மாதிரி சமயங்களில் இந்த மார்பக பம்புகளை உபயோகிக்கலாம்: அதிகமாக மார்பகங்களில் பால் கட்டி இருந்து, கைகளால் அழுத்தி பிழிந்து பால் வரவில்லை என்றாலும், சுடுநீர் ஒத்தடம் கொடுத்தும் பால் வரவில்லை. என்றால்  சீழ் பிடித்துக் கொள்ளும்  என்றாலும் , பிள்ளை பெற்ற தாயால், குழந்தையைக் கையில் தாங்கிப் பிடித்து உட்கார்ந்து,  பால் ஊட்டுவதற்கு உடம்பில் தெம்பு இல்லை என்றாலும் ,  அலுவலகம்  செல்லும் தாயாக இருந்தால் குழந்தைக்கு நேரத்திற்கு பால் கொடுக்க முடியாத சூழ்நிலை அமையுமானாலும், இரட்டைக் குழந்தைகள் பிறந்து,  இரண்டு குழந்தைகளுக்கும் பால் கொடுக்க முடியும் என்றாலும் , தாயுடைய சோர்வினாலும், உடல் நிலையை மனதில் கொண்டு  தூக்கம் கெடாமல் இருப்பதற்கும் இந்த மாதிரி செயற்கை பம்ப் முறையில் பாலை எடுத்து வைத்துவிட்டு, வேறொருவர் தாய் ஸ்தானத்தில் இருந்து,  குழந்தைக்கு எடுத்து வைத்த பாலைக் கொடுக்கலாம்.  

குழந்தை நேரிடையாக வாய் வைத்து பாலைக்  குடிக்க வேண்டாம். இம்மாதிரி எடுத்து வைத்துக் கொடுக்கலாம் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துக் கொள்ளும் தாய்மார்களையும் நாங்கள் பார்க்கிறோம். 

இதையெல்லாம் தவிர, இன்னொரு வகை உண்டு . ப்ரெஸ்ட் மில்க் டொனேஷன் அதாவது தாய்ப்பாலை தானம் செய்வது .சில தாய்மார்களுக்கு, தன் குழந்தை குடித்தும், தேவையை விட  மீதி இருக்கும். அதிகப்படியான பால் சுரக்கும். அந்தப் பாலை ப்ரெஸ்ட் பம்ப் மூலம் எடுத்து,  சேமித்து, தாய்ப்பால் சேமிப்பு வங்கியில் கொடுத்து விடுகிறார்கள். 

இது எந்த மாதிரி குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கிறது:  சில தாய்மார்களுக்கு குறைப் பிரசவம் ஆகியிருக்கும். அந்த மாதிரி குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தானே வாயை வைத்து உறிஞ்சி குடிக்கும் அளவிற்கு சக்தி இருக்காது.   தாய்மார்களுக்கும் உடல் ஒத்துழைக்காது. அதற்கு உண்டான ஆரோக்கியத்தோடு இருக்க மாட்டார்கள். அந்த மாதிரி நேரங்களில், இன்னொரு தாயின் பாலை, அக்குழந்தைக்கு கொடுக்க முடிகிறது. தாய்ப்பாலில் இருக்கும் உயிர் அணுக்களினால்  அக்குழந்தை ஆரோக்கியத்தையும்,  நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்த்துக் கொள்கிறது. தாய்ப்பாலே ஒரு மருத்துவ குணம் நிறைந்த புஷ்டியான ஆகாரம் தானே.

சரி இப்படி எடுக்கும் பாலை எத்தனை நேரம் கெட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்:  இது பலருக்கும் எழும் ஒரு சந்தேகம்தான். அதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு, கை மூலம் பீய்ச்சி எடுத்தாலும் சரி,  இல்லை பம்ப் மூலம் எடுத்தாலும் சரி 2 மணி முதல் 4 மணி நேரங்கள் வரை சேமித்ததை சாதாரணமாக வெளியே வைக்கலாம். 

சாதாரணமாக குளிர் ஊட்டுவதாக இருந்தால், குளிர்சாதனப் பெட்டியில் 6 மணி நேரங்கள் வரை வைத்திருக்கலாம். பாலை உறைய வைப்பதாக இருந்தால் , ஃப்ரீஸ் என்று சொல்கிறோமே அதுபோல் செய்வதாக இருந்தால், வாரத்திலிருந்து, மாதக்கணக்கில் கூட வைக்கலாம்.  வீட்டில் இருக்கும் ஃப்ரீசர் வேறு. இதற்காகவே உபயோகப் படுத்தப்படும் இண்டஸ்ட்ரியல் ஃப்ரீசர் என்பது வேறு. இதுபோன்ற குளிர்சாதனப்பெட்டியில், பல நாட்கள் கூட பாலை எடுத்து வைக்கலாம். 

குளிரூட்டப்பட்ட பாலை குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாமா: வேறு எப்படி பயன்படுத்துவது?  என்பது பலருக்கும் எழும் ஒரு சந்தேகம்தான். அந்தப் பாலை சூடு செய்தால் அதில் இருக்கும் உயிரணுக்கள், சத்துகள் எல்லாம் போய்விடும். அதனால் குளிரூட்டப்பட்ட பாலை வெளியே எடுத்து வைத்து, அறையின் சீதோஷ்ண நிலைக்கு அது வந்த பிறகு குழந்தைக்குக் கொடுக்கலாம். 

குழந்தைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சமயத்தில் லேசான தீயில் கை பொறுக்கும் வெதுவெதுப்பான சூட்டில் மெதுவாக சுடவைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். பெரிய தீயில் வைத்தால் பாலின் தன்மை கெட்டுவிடும். 

தாய்மார்கள், பம்பை உபயோகப்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்:  

இந்தப் பம்ப்பிற்கு  உறிஞ்சும் தன்மை( இழுப்பது போன்று) இருப்பதால், தாய்மார்களுக்கு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவுமில்லாமல் சிலருக்கு அதிகமான பால் சுரக்கவும் வாய்ப்பு உண்டாகிறது. 

சில சமயங்களில் புண்ணும் ஏற்படலாம். பம்ப் உபயோகப்படுத்துபவர்கள், அந்த சாதனத்தை நன்றாக சுத்தம் செய்து ஸ்டெரிலைஸ் செய்து,  குழந்தைக்கு உபயோகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதன் மூலம் கூட குழந்தைக்கு நோய் தொற்று உண்டாக வாய்ப்புகள் உண்டு. 

ஆகையால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு,  உபயோகிக்கும் சாதனத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பதுதான் தாய்க்கும் சேய்க்கும் நலத்தைப் பயக்கும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு வேறு எதுவுமே கிடையாது. ஆகையால் தாய்மார்களே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத்  தயங்காதீர்கள். அவசியம் கொடுங்கள்''. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com