தங்க நாற்கர சாலைகள் எனப்படும், தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை நகரங்களை இணைக்கும் பெரிய நீண்ட சாலைகளை மிகக் குறைவான கால அளவில் ஓடிக் கடந்தமைக்காக ஸூபிய்யா கான், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நான்கு சாலைகளின் மொத்த நீளம் 6002 கிமீ. இந்த தூரத்தை 110 நாள்கள், 23 மணி நேரம் 24 நிமிடங்களில் ஸூபிய்யா ஓடிக் கடந்துள்ளார். தனது ஓட்டப் பயணத்தை ஸூபிய்யா 2020 டிசம்பர் 16 -இல், தில்லியிலிருந்து தொடங்கினார். 2021 ஏப்ரல் 6-இல் தனது நடைப் பயணத்தை தில்லியில் நிறைவு செய்தார். ஸூபிய்யாவிற்கு 35 வயதாகிறது. ஸூபிய்யா ஓட்ட பந்தைய வீராங்கனையாவார்.
ஸூபிய்யாவிற்கு துணையாகவும் உதவியாளராகவும் ஸூபிய்யாவின் கணவர் இருந்துள்ளார். காரில் அமர்ந்து ஸூபிய்யாவை பின் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஸூபிய்யா கூறுகையில், ""குறைந்த கால அளவில் இந்த நெடுந்தூரத்தைக் கடக்க வேண்டும். அப்படி செய்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முடியும். அந்த லட்சியத்தில் நான் ஓடினேன். ஒவ்வொரு நகரத்திலும் ஊரிலும் நுழையும்போது ஓட்ட வீரர்களும், சைக்கிள் ஓட்டுபவர்களும் எனக்கு உற்சாகம் தர என்னுடன் கூட ஓடி வருவார்கள். பல சமயங்களில் சாலை ஓரம் உறங்கியுள்ளோம்.
நான் இத்தனை தூரம் ஓடியதற்கான சான்றுகளை கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன். ஓராண்டு காலத்தில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் சென்ற வாரம்தான் கின்னஸ் சாதனை புத்தகத்தின் அலுவலகத்திலிருந்து எனது பெயர் இடம் பெற்றதற்கான சான்றிதழ் கிடைத்தது. தங்க நாற்கர சாலைகளை மிக வேகமாகக் கடந்த வீராங்கனை என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். நெடுந்தூரம் ஓடுவது எனது ஆசை. அதனால் நான் பார்த்த வேலையையும் விட்டுவிட்டேன். நீண்ட தூரம் ஓடுவது எனக்கு இது மூன்றாவது முறை. ஏற்கெனவே, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை குறைந்த கால அளவில் ஓடியதாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன்'' என்கிறார் ஸூபிய்யா.