சருமம் மற்றும் தலைமுடியை பாதுகாக்கவும். பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் சில எளிய வழிகளை காண்போம்:
மஞ்சள்
மஞ்சள் சருமத்தை இளமையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும். ஒரு கிண்ணம் கடலைப்பருப்பு மாவுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பன்னீர் இருந்தால் ஒரு சில துளிகள் சேர்க்கலாம்.
இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர விடவும். அதன் பிறகு, குளிர்ந்த நீரில் நன்றாக கழுவவும். இதனால் உங்கள் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய்
முகத்திற்கு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் முகம் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். இது வறண்ட சரும பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. தினமும் குளிக்கச் செல்வதற்கு முன் சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை முகம் மற்றும் தோலில் தடவி சிறிது வைத்திருந்து குளித்து வர, முகம் புத்துணர்ச்சியுடனும், ஈரப்பதத்துடனும் உணர வைக்கும்.
தேன், சர்க்கரை, தேங்காய் எண்ணெய்
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது சர்க்கரை கலந்து, பின்னர் கலவையை உதடுகளில் தடவி, மென்மையாக தேய்த்துக் கொடுத்து, சிறிது நேரம் வைத்திருந்து பின் கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை இதைப் பின்பற்ற வேண்டும்.
கற்றாழை தயிர் ஹேர் மாஸ்க்
கற்றாழை முடிக்கு அற்புதங்களைச் செய்கிறது. இது முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் தோற்றமளிக்க வைக்க உதவுகிறது. மூன்று தேக்கரண்டி கற்றாழை ஜெல், இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும். இதனை முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். 10 நிமிடங்களுக்கு, நன்கு மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் வைத்திருந்து, பின்னர், வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்.
வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு
கண்களுக்குக் கீழே உள்ள கரு வளையங்களுக்கு, வெள்ளரி மற்றும் எலுமிச்சை
கலவையானது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய்களுக்கான சிகிச்சையில் இவை மிகவும் முக்கியமானவை. ஒரு பருத்தி பந்து அல்லது வெள்ளை துணியை கொண்டு, சம அளவு வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையில் நனைத்து கண்ணுக்கு கீழுள்ள வட்டங்களில் தடவவும். கண்ணில் எலுமிச்சை சாறு படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர், 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.