'பார்பி'  பிரியங்கா மோகன்...!

சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற "ஜஸ்ட் ஃபார் விமன்' விருது விழாவில் தமிழில் அறிமுகமான புதிய நடிகைக்கான விருது பெற ஸ்லீவ்லெஸ் அணிந்து சிவப்பு சேலையில் பிரியங்கா மோகன் போனாலும் போனார்.
'பார்பி'  பிரியங்கா மோகன்...!


சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற "ஜஸ்ட் ஃபார் விமன்' விருது விழாவில் தமிழில் அறிமுகமான புதிய நடிகைக்கான விருது பெற ஸ்லீவ்லெஸ் அணிந்து சிவப்பு சேலையில் பிரியங்கா மோகன் போனாலும் போனார். சிவப்பு நிற சேலை வேறு பிரியங்காவை "பார்பி' பொம்மையாக மாற்றியிருந்தது. சமூக வலைதளங்களில் பிரியங்கா வைரல் ஆனார்.

பேச்சிலும் முக பாவத்திலும் குழந்தைத்தனம் இன்னும் பிரியங்காவிடமிருந்து விடை பெறவில்லை. கண்ணை சுழற்றி சுழற்றி பேசுகையில் அடிக்கடி பிரியங்காவின் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகள் "கியூட்' .

அழகாகத் தமிழ் பேசும் பிரியங்காவுக்கு பெரிய அநீதி நடந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி இத்தனை நாள் பிரியங்காவை தமிழ்ப் படவுலகம் கண்டு கொள்ளாமல் விட்டது?

"டாக்டர்', "எதற்கும் துணிந்தவன்' போன்றவற்றைத் தொடர்ந்து "டான்' பதத்திலும் நடித்து முடித்துள்ளார். பிரியங்காவுக்காகப் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள் என்றால் அது மிகை இல்லை. "டான்' வெளிவரும் போது பிரியங்கா தமிழ்நாடு முழுவதும் வியாபித்துவிடுவார்.

பிரியங்காவிற்கு வயது 27. பிரியங்காவின் அப்பா தமிழ் நாட்டுக்காரர். அம்மா கர்நாடகா. வளர்ந்தது படித்தது பெங்களூரில். பயோடெக்னாலஜியில் பிடெக் பட்டம் பெற்று நடிக்க வந்துவிட்டார்.

"ஒந்து கதை ஹெல' என்ற கன்னட படத்தின் மூலம் 2019 -இல் அறிமுகமாகி, இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நானியுடன் நடித்த "கேங் லீடர்' கமர்ஷியலாக வெற்றி பெற்றது.

தமிழுக்கு பிரியங்கா மோகனை அறிமுகம் செய்ததற்காக ரசிகர்கள் இயக்குநர் நெல்சனுக்கு நன்றி சொல்ல... பிரியங்கா யாருக்கு நன்றி சொல்கிறார் தெரியுமா ?

பிரியங்காவே சொல்கிறார்:

""அப்போது நான் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் என்னைப் படம் பிடித்து அவரது வலைதளப் பக்கத்தில் போட... அதைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர் நண்பரும் இயக்குநருமான நெல்சனிடம் காண்பிக்க "டாக்டர்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன்.

படத்தில் இயக்குநர் நெல்சன் சொன்னது போல நடித்தேன். சிவகார்த்திகேயனுடன் "டான்' படத்திலும் நடித்திருக்கிறேன். டாக்டர் படத்தைத் தொடர்ந்து சூர்யா சாருடன் "எதற்கும் துணிந்தவன்' நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீராம் சாருக்கு அடுத்தபடியாக இயக்குநர் நெல்சனுக்கு நன்றி சொல்லணும்'' என்கிறார் பிரியங்கா.

யார் விட்டாலும் நெல்சன் விடமாட்டார் போல.. ரஜினி அடுத்து நடிக்கும் படத்தில் பிரியங்காவை நடிக்க வைக்க ஆன மட்டும் முயன்று கொண்டு இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com