சமீபத்தில் புதுதில்லியில் வைப்ரன்ட் கான்செப்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்தியாவின் மிக பிரபலமான திருமதிகள் கலந்து கொள்ளும் அழகிப் போட்டியான "மிசஸஸ் இந்தியா கேலக்ஸி 2021' நடைபெற்றது. இதில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா திவா தமிழகத்தின் சார்பாக முதன்முறையாக பங்கேற்று மிசஸஸ் க்யூட் ஸ்மைல் பட்டத்தை வென்று ள்ளார். இது குறித்து உஷா கூறுகையில், ""நான் எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். எனது குடும்பம் பிஸினஸ் சார்ந்த குடும்பம் என்பதால், நானும் சொந்த தொழிலை உருவாக்கிக் கொண்டேன். வெனோரா அண்ட் விவர்ஷா என்ற ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதில், வெனோரா என்பது உலக அளவில் எடுத்துச் செல்லப்படும் வெஸ்டர்ன் ஸ்டைல் ஆடையகம். விவர்ஷா என்பது அடித்தட்டு மக்களையும், கிராமப்புற மக்களையும் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஆடையகம். விவர்ஷாவை பொருத்தவரை, அடித்தட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் தளமாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, இங்கே பெண்களுக்கு தையல், ஆர்.இ ஓர்க் போன்ற பயிற்சி அளித்து வருகிறோம். அதுபோன்று, எங்கள் நிறுவனங்களுக்கு தேவையான மெட்டீரியல்ஸ் அனைத்தையும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நலிந்த நெசவு தொழிலாளிகளிடம் இருந்து வாங்குகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானத்தை உருவாக்கித் தர முடிகிறது.
திருமதிகளுக்கான அழகிப் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து?
பொதுவாக அழகிப் போட்டி என்றால், அரைகுறை ஆடைகளில் வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பெண்கள் அழகு போட்டியில் கலந்து கொள்ள தயங்குகிறார்கள். ஆனால், அழகுப்போட்டியை பொருத்தவரை, வெளிப்புற அழகு முக்கியமல்ல, ஒருவரின் தன்னம்பிக்கை கொண்ட உட்புற அழகுதான் உண்மையான அழகு என்பதை, பெண்களுக்கு எடுத்துரைத்து, தயக்கத்தை தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். எனவே, இந்த போட்டியில் முழுக்க முழுக்க, நமது பாரம்பரிய உடையான சேலையைத்தான் அணிந்து வந்தேன். சுமார் 2000 பேர் கலந்து கொண்ட ஆடிஷனில், கடைசியாக 37 பேர் மட்டுமே தேர்வாகியிருந்தனர். அதிலும் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட 57 பேரில் நான் மட்டும்தான் தேர்வாகி, தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்றேன். அதில் எனக்கு க்யூட் ஸ்மைலுக்கான பரிசு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.