சின்னத்திரை மின்னல்கள்!
By - ஸ்ரீ | Published On : 23rd February 2022 06:00 AM | Last Updated : 23rd February 2022 06:00 AM | அ+அ அ- |

தெலுங்கு செல்லும் நடிகை!
தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "ரன்' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் வைஷு சுந்தர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "ராஜா ராணி' தொடரில் நடித்து வருகிறார். டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் இவர், நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறைக்குள் வந்திருப்பவர். சில ஆல்பங்களின் பாடல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது தெலுங்கு தொடரின் வாய்ப்பு கிடைத்து தெலுங்கு திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார். புதிதாக ஒளிபரப்பாகவுள்ள "குங்குமப் பூ' என்ற தெலுங்குத் தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனை தனது இணையதளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வைஷுவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய கதாபாத்திரத்தில் சாயா சிங்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் தொடர் "நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' . இத்தொடரின் நாயகியாக இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் சாயா சிங் நடிக்கிறார். இதில் , அவரது மூன்று தங்கைகளாக, நடிகை சுனிதா, சங்கவி, ஐரா அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இது குறித்து சாயா சிங்கூறுகையில்,
""மதுரை நகரை பின்புலமாக கொண்ட இத்தொடரில் இளவயதிலேயே பெற்றோரை இழந்த நான்கு சகோதரிகளின் பாச போராட்டமும், பெற்றோரின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடுவதுமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்கள்தான் தலைவர்களாக இருப்பார்கள். ஆனால், இக்கதையில் எனது கதாபாத்திரம் ஆண்களுக்கு நிகரான திறன் கொண்டு, தங்கைகளை ஆதரித்து, குடும்பத்தை வழிநடத்திச் செல்வதாக அமைந்துள்ளது. எனவே, எனது இந்தப் புதிய கதாபாத்திரம் இதுவரை நான் செய்த கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டு தனித்துவமாக திகழ்கிறது'' என்றார்.