புதிய குத்துச்சண்டை உலக சாம்பியன் நிகாத் ஜரினிடம், தன்னை ""நாக் அவுட் செய்ய வேண்டாம்'' என கோரிக்கை விடுத்தார் ஹிந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான்.
கியூபா, பல்கேரியா, மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், குத்துச்சண்டையில் வலுவாக உள்ளன. இந்தியாவிலும் மகளிர் குத்துச்சண்டை சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக மேரி கோம், சி.லேகா, ஜென்னி, சரிதா தேவி ஆகியோர் உலகளவில் கோலோச்சியுள்ளனர். மேலும் இதில் மணிப்பூரின் மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
புதிய உலக சாம்பியன் நிகாத் ஜரின்:
மேரி கோமுக்கு சவால் விடும் வகையில் அவரது எடைப்பிரிவில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாதைச் சேர்ந்த இளம் வீராங்கனை நிகாத் ஜரின் உருவானார். 25 வயதான நிகாத் ஜரின் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை முகமது ஜமீல் அகமதுவுடம் குத்துச்சண்டை வீரர் தான்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஐபிஏ) மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஃபிளைவெயிட் 52 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்தின் ஜிட்போங் ஜுடாமûஸ வீழ்த்தி தங்கம் வென்று புதிய உலக சாம்பியன் ஆனார் நிகாத். இதன் மூலம் உலக சாம்பியன் பட்டம் வென்ற 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.
சல்மான் கான் கோரிக்கை:
நிகாத் ஜரின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஹிந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து நிகாத் ஜரினுக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. ""ஏன் என்றால் சல்மான் கானின் அதிதீவிர ரசிகை நிகாத். தங்கம் வென்ற நிகாத்துக்கு வாழ்த்துகள்'' என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நிகாத், ""தீவிர ரசிகையான எனது கனவு நனவாகி உள்ளது. சல்மான் எனக்கு ட்விட்டரில் பதிவிடுவார் என எதிர்பார்க்கவில்லை. எனது வெற்றியை மேலும் சிறப்பாக்கியதற்கு நன்றி'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது பதில் ட்வீட்டில், ""என்னை நாக் அவுட் செய்ய வேண்டாம் நிகாத். எனது கதாநாயகன் சில்வஸ்டர் ஸ்டலோன் போல் தொடர்ந்து குத்துகளை விடுங்கள்'' என கோரியிருந்தார்.