தேவையானவை:
ஒரே வடிவான உருளைக்கிழங்கு - 10
கொப்பரைத் தேங்காய் - அரை மூடி
முந்திரி , திராட்சை - 10
ஏலக்காய் - 2
சர்க்கரை - 250 கிராம்
ஏதாவது ஒரு புட் கலர் - 1 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
உருளைக்கிழங்கை சுத்தப்படுத்தி வேகவிட வேண்டும். வேகவிடும்போது தண்ணீரில் சிறிதளவு சர்க்கரையைப் போடவும். திட்டமாக வேக வைத்து இறக்கி, தோல் எடுத்து நடுவே குறுக்குவாட்டில் நறுக்கி இருபாகமாக எடுத்து வைக்கவும். நடுவில் உள்ள பாகத்தை ஒரு தேக்கரண்டியிலோ அல்லது கத்தியாலோ மெதுவாக சுரண்டி வைக்கவும். இப்பொழுது குழி போல இருக்கும். இரண்டு பாகமாக நறுக்கும் கிழங்கை, அந்தந்த ஜோடியுடன் சரியாக வைக்க வேண்டும். அளவு மாறிவிட்டால் திரும்பவும் சேர்க்கும்போது சிரமமாகஇருக்கும். பிறகு, அடிகனமான பாத்திரத்தில் கால் கோப்பை தண்ணீர் விட்டு அரை கோப்பை சர்க்கரை போட்டு கம்பிப் பாகு வரும் வரை கிளற வேண்டும். இறக்கி அதில் ஏலப்பொடி, துருவிய கொப்பரை, வறுத்த முந்திரி திராட்சை இவைகளைப் போட்டு மீண்டும் நன்றாகக் கிளறி ஒரு தட்டில் கொட்ட வேண்டும். சற்று சூடாக இருக்கும் பொழுதே துருவப்பட்ட உருளைக்கிழங்கிற்குள் இந்த கொப்பரை கலவையை அடைக்க வேண்டும். உருளைக்கிழங்கில் அடைத்தவுடன் இரு பாகங்களையும் அதே பாகால்உள்பூராவும் தடவி இருபாகங்களையும் ஒட்டவும். இது சூட்டில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். பிறகு மீதியுள்ள சர்க்கரையை பொடித்து அல்லது அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஏதாவது கலர் சேர்த்து இந்த முழு உருளைக்கிழங்கை புரட்டி எடுக்க வேண்டும். மேலே தேங்காய் துருவலைத் தூவ வேண்டும்.