மிக இளம் வயதில் உடல் உறுப்புகளைத் தானம் செய்தவர் என்ற பெயரை நொய்டாவைச் சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட நொய்டாவைச் சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி, அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த ஏப்ரல் 27-இல் சுடப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கோமா நிலைக்குச் சென்ற அவரைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்தது. இதனால், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தீபக் குப்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரோலியின் பெற்றோருடன் அமர்ந்து உடல் உறுப்புகள் தானம் குறித்து பேசினர். மற்ற குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் உடனடியாகத் தானம் பெற்று, எய்ம்ஸ் மருத்துவமனையிலும், பிற மருத்துவமனையிலும் உறுப்புகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு உடனடியாகப் பொருத்தப்பட்டது.
மகள் இறந்த சோகத்திலும், உடல் உறுப்புகளால் ஐந்து உயிர்களைக் காப்பாற்றியதற்காக ரோலியின் பெற்றோரை எய்ம்ஸ் மருத்துவர் பாராட்டினார்.
இதனால், இந்திய மருத்துவத் துறை வரலாற்றில் மிக இளம் வயதில் உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர் என்ற பெருமையை ரோலி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரோலியின் தந்தை ஹர்நாராயண் பிரத்ஜாபதி கூறுகையில், "உடல் உறுப்புகளைத் தானம் செய்தால், மற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, சம்மதம் தெரிவித்தோம்' என்றோம்.