தன் வினை தன்னைச் சுடும்!
வெற்றிவேல் மாடு ஒன்றை வாங்கினார். மாட்டுக்குப் புண்ணாக்கு தேவைப்படும் இல்லையா?.... எனவே புண்ணாக்கு விற்கும் வீராச்சாமியின் கடைக்குச் சென்றார். வீராச்சாமிக்கு பால் தேவைப்பட்டது. வெற்றிவேலுக்கு புண்ணாக்கு தேவைப்பட்டது.
இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதாவது, புண்ணாக்கு விற்கும் வீராச்சாமி தினமும் ஒரு கிலோ புண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதற்கு பதில் வெற்றிவேல் ஒரு கிலோ பால் தர வேண்டும்.
ஒரு நாள் புண்ணாக்குக் கடைக்காரர் பாலை எடை போட்டுப் பார்த்தார். பால் முக்கால் கிலோதான் இருந்தது! அவருக்குக் கோபம் வந்தது. ""அடடா!.....இத்தனை நாள் என்னை ஏமாற்றி இருக்கிறானே இந்த வெற்றிவேல்!....இவனைச் சும்மா விடக்கூடாது!'' என்று நினைத்தார்.
ஊர் பஞ்சாயத்தில் வீராச்சாமி புகார் செய்தார். பஞ்சாயத்துத் தலைவர் வெற்றிவேலைக் கூப்பிட்டு விசாரணை செய்தார்....
""என்னப்பா வெற்றிவேல்!.... பாலை எடைக் குறைவாகத் தந்திருப்பதாக புகார் செய்கிறாரே வீராச்சாமி....ஒப்பந்தப்படி வீராச்சாமி தரும் ஒரு கிலோ புண்ணாக்கிற்கு ஒரு கிலோ பால் தரவேண்டாமா?....எடை குறைவாக இருக்கிறதாமே...என்ன பதில் சொல்லப் போகிறாய்?'' என்று கேட்டார்.
""எனக்குத் தெரியாதுங்க......வீராச்சாமி புண்ணாக்கு தருவார்!....தராசில் புண்ணாக்கை ஒரு தட்டில் வைத்து, மறுதட்டில் பால் செம்பை வைத்து நிறுத்துக் கொடுத்துவிடுவேன். '' என்று பால்காரர் சொன்னார்.
புண்ணாக்கு வியாபாரி வீராச்சாமி அதைக் கேட்டுத் தலைகுனிந்தார்....
பஞ்சாயத்தில் அவருக்கு அபராதம் விதித்தார்கள்.
நீதி: நாம் என்ன செய்கிறோமோ அதற்குத் தகுந்த பலன்தான் நமக்குக் கிடைக்கும்.