சோம்பேறி குணம் படைத்த போலி பக்தன் ஒருவன் தாடி மீசையுடன் திரிந்து கொண்டிருந்தான். அரைகுறையாக சில ஸ்லோகங்களைப் படித்திருந்தான். அவனுக்குப் பசித்தது. ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அருகில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அவனுக்குக் குளிக்க விருப்பமில்லை. அவன்தான் சோம்பேறியாயிற்றே! பசி வேறு! ஒரு மூதாட்டி சோற்று மூட்டையுடன் எதிரில் வந்துகொண்டிருந்தான். அவளிடம் தனக்கு உணவு அளிக்கும்படி கேட்டான். அவளும் சம்மதித்தாள். தாடி மீசையுடன் அழுக்காக இருந்த சோம்பேறியைப் பார்த்து, முதலில் குளித்து விட்டு வாருங்கள்!அதற்குள் உணவைத் தயாராக எடுத்து வைக்கிறேன்....அருகில்தானே ஆறு இருக்கிறது!...'' என்றாள்.
சோம்பேறி பக்தனுக்கு குளிக்க விருப்பமில்லை. அவன் மூதாட்டியைப் பார்த்து, "அது ஒன்றும் தேவையில்லை அம்மா!.... எப்போதும் கோவிந்தன் நாமத்தைச் சொல்பவர் யாராக இருந்தாலும் அவரது உள்ளமும், உடலும், எப்போதும் தூய்மையாக இருக்கும்!....என்கிறது சாஸ்திரம்!....."கோவிந்தேதி சதா ஸ்நானம்' என்பதற்கு அதுதானே பொருள்!'' என்றான்.
ஏதுமறியாதவள் போல் தோற்றமளித்தாலும் பக்தியில் சிறந்து விளங்குபவள் அந்த மூதாட்டி! அவள் அவனுக்கு அவளறிந்த சாஸ்திர ரீதியாக பதிலளித்தாள்! "உஙகளுக்கு ஒன்று தெரியுமா?.... ராம நாமத்தைச் சொன்னால் போதும்!....அதுவே உணவுக்கு ஈடானது....அதை "ராம நாமாமிர்தம் சதா போஜனம்' என்று கூறுவார்கள் பெரியவர்கள்!....அதற்குப் பொருள் ராம ராமநாம் என்னும் உணவை எப்போதும் உண்ணுங்கள் என்பதே! அதனால் நீங்களும் சாப்பிட்டதாகக் கருதி புறப்படலாம்!'' என விளக்கினாள்.
மூதாட்டியின் பதிலைக் கேட்ட அந்த சோம்பேறி பக்தன் ஆற்றை நோக்கி விரைவாக நடந்தான்!
ஜோ.ஜெயக்குமார்