கேள்வி:
கரையான் புற்றுகளைப் பார்த்தால் பெரிது பெரிதாக இருக்கின்றன.... கரையான்களோ அளவில் மிகவும் சிறிதாக இருக்கின்றன... எப்படி அவ்வளவு பெரிய புற்றுகளைக் கட்டுகின்றன?
இது ஒரு, வாயைப் பிளக்க வைக்கும் அதிசயம்தான். மனிதர்கள் வீட்டைக் கட்டுவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, கரையான் புற்றுக்கள் ஆச்சரியமானவைதான்.
கரையான்களிலும் ராஜா, ராணிகள் உண்டு. இவைதான் ஆரம்பத்தில் புற்றுக்கான அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுக்கும். பின்னர் வேலைக்கார கரையான்கள் கூட்டு முயற்சியால், சிறு மரக்குச்சிகள், களிமண், செம்மண் மற்றும் தங்களுடைய எச்சில் ஆகியவற்றைக் கலந்து, குழைத்து புற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுகின்றன.
அந்தப் புற்றுக்குள் சென்று பார்த்தால் நடைபாதைகளும் ராஜா, ராணிக்கென்று பிரத்யேகமான அறைகள் கூட இருக்கும் என்கிறார்கள்.
உலகிலேயே மிகப் பெரிய புற்று 12 ஆயிரம் டன் மண்ணைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதாக ஒரு சாதனை (ரெக்கார்ட்) இருக்கிறது. அடேங்கப்பா...!
-ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
தேனீக்கள் கொட்டுவதால் உயிரினங்கள் இறந்து போகும் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது உண்மையா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
நல்ல பதில் கிடைக்கும்.