இரண்டு இமைகள் இணைந்திட்டால்தான்
விழியை மூடிக் காக்கலாம்!
இரண்டு உதடு இசைந்திட்டால்தான்
குழலில் இசையை ஊதலாம்!
இரண்டு கால்கள் இயங்கினால்தான்
தரையின் மீது நடக்கலாம்!
இரண்டு சிறகு அசைந்திட்டால்தான்
பறவை வானில் பறக்கலாம்!
விரல்கள் ஐந்து இணங்கினால்தான்
சோற்றைப் பிசைந்து உண்ணலாம்!
கரங்கள் இரண்டு குவிந்திட்டால்தான்
வணக்கம் செய்து மகிழலாம்!
நாலு கால்கள் நிலைத்திட்டால்தான்
பந்தல் மேலே போடலாம்!
நாலு பேர்கள் கூடினால்தான்
நற்செயல்கள் நடந்திடும்!
கூடி வாழும் வாழ்விலேதான்
கோடி இன்பம் உளதெனப்
பாடிவைத்தார் நமது கவிஞர்
பாரதியார் தானடா!