அரச மரத்தின் அடியில் வாழும் பிள்ளை யாரு?
ஆயுள் முழுக்க வரம் அருளும் பிள்ளையாரு!
அம்மை, அப்பன் தெய்வம் என்ற பிள்ளை யாரு? - அவரைச்
சுற்றி வந்து கனி கவர்ந்த பிள்ளையாரு!
அருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு?
ஆனைமுகம் அழகாய்க் கொண்ட பிள்ளையாரு!
கொழுக்கட்டைகள் மிக விரும்பும் பிள்ளை யாரு?
அழுக்கு மனத்தை வெள்ளையாக்கும் பிள்ளையாரு!
எலியிலமர்ந்து உலகம் சுற்றும் பிள்ளை யாரு?
ஏற்றம் நாளும் தந்திடும் நம் பிள்ளையாரு!
முருகவேளின் அண்ணனான பிள்ளையாரு! - முருகன்
வள்ளியை மணம் புரிய உதவி செஞ்சாரு!
காவிரித்தாய் பாய்ந்து வரக் கலம் கவிழ்த்தாரு!
கழனிகளைச் செழிக்க வைத்தார் பிள்ளையாரு!
சிறுவர்களின் சிந்தை கவரும் பிள்ளை யாரு?
சிதறுகாயில் மனம் மகிழும் பிள்ளையாரு!
தோப்புக் கரணம் போட்டு நாம் அவரை வணங்கினால்
தேக திடம், செல்வம், புத்தி தந்து அருளுவார்!