வாசிப்பும் நேசிப்பும்!

எனக்கு இன்னிக்குத்தானே டைம்..என் லீவன்னிக்குதானே நானும் செய்ய முடியும்! அவனை வேணும்னா அந்தண்ட போகச் சொல்லு!.... தேவகி : போயேண்டா! போய் படி! இல்ல விளையாடு!
வாசிப்பும் நேசிப்பும்!

அரங்கம்
 உஷா தீபன்
 காட்சி - 1,
 இடம் - வீடு, மாந்தர்- சதீஷின் அப்பா,
 தியாகராஜன், சதீஷ் மற்றும் அம்மா தேவகி
 தேவகி : (அடுப்படியிலிருந்து அந்த அறையை நோக்கி வந்து கொண்டே) இதுக்குத்தான் சொன்னேன்!அவனுக்குலீவு நாளன்னிக்கு தூசியத் தட்டாதீங்கன்னு! பாருங்க! வந்து நின்னுட்டு தும்முறான்!
 தியாகராஜன் : எனக்கு இன்னிக்குத்தானே டைம்..என் லீவன்னிக்குதானே நானும் செய்ய முடியும்! அவனை வேணும்னா அந்தண்ட போகச் சொல்லு!....
 தேவகி : போயேண்டா! போய் படி! இல்ல விளையாடு!....எதையாச்சும் செய்! இங்க தூசி முன்னால நின்னுக்கிட்டு!.
 தியாகராஜன் : அவனுக்கு இந்த ஜாதிக்காய்ப் பெட்டி மேலே ரொம்ப நாளா ஒரு கண். அதுக்குள்ள என்னதான் இருக்கு பார்க்கணும்னு! பார்த்திட்டுப் போகட்டுமே! உனக்கென்ன நஷ்டம்!எங்கப்பா சேர்த்து வச்ச புத்தகங்களைக் காண்பிக்கப் போறேன்! ரொம்பத் தூர்ந்து போனவைகளை ஒதுக்கி எடைக்குப் போடப் போறேன்!
 தேவகி : நல்லவேளை! இன்னைக்காச்சும் உங்களுக்கு மனசு வந்திச்சே! அதுல பார்க்கிறதுக்கு என்ன இருக்கு!அப்டியே மொத்தமா திண்ணைல கொண்டு கொட்டினா! பேப்பர்காரன் தூக்கிட்டுப் போறான்!
 சதீஷ் : என்னம்மா நீ இப்டிச் சொல்றே! தாத்தா அருமை அருமையான புக்ûஸயெல்லாம் வச்சிட்டுப் போயிருக்கிறதா அப்பா சொல்றாங்க! நீ தூக்கி எறிங்கிறியே!?
 தேவகி : ஆம்மா! பெரிய்ய்ய்ய பொக்கிஷம்! அத்தனையும் இத்துக் கிடக்கு! இத இன்னம் வேறே பாதுகாக்கணுமாக்கும்!.?
 தியாகராஜன் : நீ சொல்றது உண்மைதான்! எல்லாப் புத்தகங்களையும் படிக்க முடிலதான்!ஆனா நல்லாயிருக்கிறவைகளை இவனுக்காவது கொடுக்கலாம்தானே! நாளப் பின்ன இவன் படிக்க மாட்டானா?
 சதீஷ் : கண்டிப்பா படிப்பேன்ப்பா!.....எங்க ஸ்கூல் லைப்ரரில உட்கார்ந்து படிக்கும்போது எந்தப் புத்தகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு எடுத்துத் தருவாங்க! எங்க தலைமையாசிரியர் அவ்வளவு உற்சாகப்படுத்துவார்! படிக்கிற புத்தகங்கள ஓரத்துல மடிக்கக் கூடாது!.அன்டர்லைன் பண்ணக் கூடாது! வேணும்னா தனியாக் குறிப்பு எடுத்துக்கலாம்! எந்த வரிசைல எடுத்தமோ அதே இடத்துல ஞாபகமாக் கொண்டு வைக்கணும்! சீரியல் நம்பர் மாறாம வைக்கணும்! அடுக்கு குலையக் கூடாதுன்னு! நிறையச் சொல்லுவார்! அதனாலதாம்ப்பா உன்கிட்டே வந்து கேட்டேன்!.
 தியாகராஜன் : கேட்டியா அவன் சொல்றதை?... படிக்க ஆசைப்படுற குழந்தைகளைத் தடுக்கக் கூடாது! இதுகளை எடைக்குப் போட்டா வெறும் ரெண்டு ரூபாய்க்கும் அஞ்சு ரூபாய்க்கும் எடுத்துக்குவான்! ஆனா அதோட மதிப்பு? அதைச் சேர்த்து வச்சவங்களுக்குத்தான் தெரியும்!
 தேவகி : என்னவோ பண்ணுங்க!...வீட்டுல குப்பை சேருதேன்னு சொன்னேன்!
 தியாகராஜன் : இதையெல்லாம் பாதுகாப்பா எப்படி வச்சிக்கணும்னு சொல்லிக் கொடுப்போம்! படிக்கப் படிக்க அறிவு விசாலமடையும்! பையனும் படிக்க விரும்பறான்! தடை போடலாமா?
 காட்சி - 2,
 இடம் -–வீடு, மாந்தர் - சதீஷ் மற்றும் அப்பா
 தியாகராஜன்
 (அறைக் கதவை அடைக்கிறார்)
 தியாகராஜன் : இந்தா! இதப் பாரு! இது ராஜாஜி எழுதின சக்ரவர்த்தித் திருமகன்!"பழைய புத்தகம். இது இப்போ இராமாயணம்ங்கிற பேர்ல வந்திருக்கு. இது வியாசர் விருந்து!
 அதாவது மகாபாரதம். ரெண்டுமே கொஞ்சம் பழசாப் போச்சுதான்!....அட்டை போட்டுத் தரேன். புதுப் பெட்டில வச்சுப் பாதுகாக்கலாம்! இந்தா பார்! உ.வே.சா.வோட என் சரித்திரம்! இதோ பார்! வள்ளலாரோட திருஅருட்பா!எல்லாமே ரொம்ப முக்கியமான புத்தகங்கள். இது திருக்குறள் உரை! மு.வரதராசனார் எழுதினது! நல்ல புத்தகம்! கொஞ்சம் கொஞ்சமா படிக்க ட்ரை பண்ணு! எதுக்கு தேவையில்லாம பேப்பர்காரனுக்குப் போடணும்! அப்புறம் புதுசு வாங்கப் புறப்படணும்! வீண் செலவுதானே!
 சதீஷ் : கண்டிப்பாப்பா! தாத்தா எவ்வளவு புக்ஸ் சேர்த்து வச்சிருக்கார்? அப்போ எவ்வளவு படிச்சிருப்பார்? என் ஃப்ரெண்ட்ஸ்டெல்லாம் சொல்லுவேன்! எங்க லைப்ரரில இதெல்லாம் இல்லப்பா!அங்கே நிறைய காமிக்ஸ் புக்ஸ், கதைப் புத்தகங்கள், பாட நோட்ஸ், இப்டித்தான் இருக்கு!.
 தியாகராஜன் : நல்ல புத்தகங்களை தேடி எடுத்துப் படிக்கிறதும், சேர்த்து வைக்கிறதும் நமக்கும், நம்ம சந்ததிகளுக்கும் செய்ற பெரிய தொண்டு! வீட்டுக்கு வீடு லைப்ரரி இருக்கணும்! வீட்டிலே புத்தகங்களுக்குன்னு அலமாரி வச்சு, ஒரு அறையைத் தனியா கட்டணும்! புத்தகங்கள் பொக்கிஷங்களாக்கும்! அறிவுச் செல்வமில்லையா!?
 சதீஷ் : நூத்துக்கு நூறு சரிப்பா! போன வாரம் எங்க ஸ்கூல் ஃபங்ஷனுக்கு வந்திருந்த ஒரு வி.ஐ.பி! புத்தகங்கள் படிக்கிற பழக்கத்தப் பத்தி வாசிப்புப் பழக்கம்ங்கிற தலைப்புல ஒரு மணி நேரத்துக்கு மேலே பேசினார்ப்பா!அதுக்கு ஒரு ரஷ்யச் சிறுகதையைச் சொல்லி விளங்க வச்சார்! வேர்ல்டு பெஸ்ட் உறன்ட்ரெட் ஷார்ட் ஸ்டோரீஸ்ல ஒண்ணாம் அந்தக் கதை! ரொம்ப சூப்பர்ப்பா !ஆன்டன் செகாவ்ங்கிறவர் எழுதின கதையாம் அது! மொழி பெயர்ப்புன்னு சொன்னார்! பிரமாதமான ஸ்பீச்! அசந்துட்டேம்ப்பா!. எனக்கும் ஒரு நாளைக்கு அவர் மாதிரிப் பேசணும்னு ஆசை வந்திடுச்சு!
 தியாகராஜன் : குட்! நீ இப்டி புக்ஸ் படிக்கிறதுல இன்ட்ரஸ்டா இருக்கிறது எனக்குப் பெருமையா இருக்கு! நல்லா கவனம் வச்சிக்கோ!....பாடங்களுக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ்!...அப்புறம்தான்
 இதெல்லாம்..ஓ.கே!..?
 சதீஷ் : ஓ.கே.ப்பா! நான் எப்பவுமே க்ளாஸ் ஃபர்ஸ்ட்தாம்பாப்பா! அத யாருக்கும் விட்டுக் கொடுத்திற மாட்டேன்!
 தியாகராஜன் : குட் பாய்! ஓடு! அம்மா கூப்பிடுறா...சாப்பிடப்போ!...
 (சதீஷ் டைனிங் டேபிளை நோக்கி ஓடுகிறான்)
 காட்சி - 3,
 நேரம் - இளம் காலைப் பொழுது. சூரியன் உதித்து மெல்லத் தன் கிரணங்களை விரிக்கும் காட்சி.
 மாந்தர் - சதீஷின் அம்மா தேவகி, சதீஷ்!.. மற்றும் அப்பா தியாகராஜன்
 (சதீஷின் அம்மா மொட்டை மாடிக்குப் போக படியில் ஏறுகிறாள். --சதீஷ், படித்துக் கொண்டிருந்த பாடப் புத்தகத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடுகிறான்!--)
 
 சதீஷ் : அம்மா! அம்மா! நானும் வர்றேன்!நானும் வர்றேன்!..
 தேவகி : அதெல்லாம் வேண்டாம்! பேசாம உட்கார்ந்து பாடத்தைப் படி! இப்ப வந்துருவேன்..கீழ!.
 சதீஷ் : வரத்தான் செய்வேன்! நீ என்ன செய்றேன்னு பார்க்கணும் எனக்கு!
 தியாகராஜன் : வந்தா வந்துட்டுப் போறான்! கூட்டிட்டுப் போயேன்! குழந்தைகளுக்கு மாடில ஓடியாடுறதுல ஒரு சந்தோஷம்!இருக்காதா பின்னே!
 தேவகி : சரி! வந்து தொலை!....உங்கப்பாவே சொல்லியாச்சு! அதுக்கு மேலே நீ கேட்கவா போறே!
 சதீஷ் : ஏம்மா இப்டிச் சொல்றே! தொலைன்னு! போம்மா!....
 தேவகி : சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டா கண்ணு! உன்னைப் போய் திட்டுவேனா! என் தங்கமாச்சே நீ!.... வா!வா!.
 சதீஷ் : என்னம்மா செய்யப்போறே?... மாடில தண்ணி தெளிக்கப் போறியா?
 தேவகி : இப்ப எதுக்குத் தண்ணி தெளிச்சிண்டு? சாயங்காலத்துக்கு மேலே தெளிச்சாலும் பிரயோஜனமுண்டு! ராத்திரி தூங்கறச்சே வீட்டுக்குள்ளே குளிர்ச்சியாயிருக்கும்! இது அதுக்கில்லே!..
 சதீஷ் : பின்னே எதுக்காம்!..?
 தேவகி : வந்துதான் பாரேன்!அதுக்குள்ளேயும் என்ன அவசரம்? சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறக்கிறாள்.
 (ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவது போல் உற்சாகமாய் முகம் மலர அடியெடுத்து வைக்கிறான் சதீஷ். பரந்த வானத்தைப் பார்க்கிறான். தொலைவில் தன் கதிர்களை விரிக்கும் இளஞ்சூரியனை நோக்குகிறான். கூட்டம் கூட்டமாய்ப் உயரத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கிறான். அவனறியாமல் ஒண்ணு!ரெண்டு என எண்ணுகிறது மனம். சே!...சே! அப்டி எண்ணக் கூடாது! பார்த்த ஜோர்ல! மொத்தம் எத்தனைன்னு டக்குனு சொல்லணும்!.அது கரெக்டா இருக்கணும்!. –எதிர்ப்புறத்தில் பறக்கும் இன்னொரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து அப்படி சட்டென்று கணிக்கிறது மனம். ஒன்பது!..சரியா!.? துல்லியமாய் கூர்ந்து நோக்குகிறான். ஒன்று கூட!.பத்து!..இட்ஸ் ஓ,கே!.திரும்பவும் ட்ரை பண்ணலாம்!
 சிரித்துக் கொள்கிறான்)
 
 தேவகி : சதீஷ்!அங்க என்ன பண்ற? இங்க வா!..
 சதீஷ்: இதோ வந்திட்டேம்மா!..ஆவலோடு ஓடுகிறான்.
 (மாடித் திட்டுக்குக் கீழே இருந்த இரண்டு மூன்று மண் சட்டிகளைச் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள் தேவகி)
 
 சதீஷ் : எதுக்கும்மா இது? புதுசா இருக்கு!..இத்தன நாள் சொல்லவே இல்ல எங்கிட்ட!...
 தேவகி : இது சம்மர் டைம் இல்லயா!....பறவைகளெல்லாம் தண்ணி கிடைக்காமத் தவிக்கும்!...அதுகள் தாகம் தீர்க்கத்தான் இந்த ஏற்பாடு!....எப்டி?.... எங்க பார்த்தாலும் தண்ணிக் கஷ்டமாத்தானே இருக்கு! நம்மள மாதிரிதானே அதுகளும்!
 சதீஷ் : அப்டியா?... இங்க பேர்ட்ஸ் வருமாம்மா?... எப்டிச் சொல்றே?....எல்லாம் பறந்தில்ல போயிட்டிருக்கு?
 தேவகி : சொல்றேல்ல! அதுக கூட்டமா எங்க போயிட்டு வருது சொல்லு பார்ப்போம்?
 சதீஷ் : தெரியலையேம்மா! எங்க போகுதுங்க?
 தேவகி : நீர் நிலைகளைத் தேடிப் போகும்! தண்ணீர் அருந்த! சாயங்காலம் போல பொழுது சாய்ஞ்சு இருப்பிடத்துக்குத் திரும்பும்!...இதெல்லாம் கவனிச்சுப் பார்க்கணும்!...இங்க நாம பழக்கம் ஏற்படுத்தினா எல்லாம் தானா வருமாக்கும்! அதுக்குத்தான் இது!
 சதீஷ் : சூப்பர்ம்மா!.என்னது?... இது எங்கே வாங்கினே!..?
 தேவகி : நெல்லு மணி! அரிசிக் கடைக்குப் போகைல தனியா கொஞ்சம் வேணும்னு கேட்டேன்! கொடுத்தான்!
 சதீஷ் : சரி! இத என்ன செய்வே?
 தேவகி : பாரேன் என்ன செய்றேன்னு!
 (சொல்லிக் கொண்டே மாடித் திட்டுச் சுவர்களில் அந்த நெல்மணிகளை இறைக்கிறாள் தேவகி – அப்படியே தண்ணீர் சட்டிகளின் அருகிலும் கொஞ்சம் சிதற விடுகிறாள்)
 சதீஷ் : எதுக்கும்மா இப்டி!.இதுக்கு அரிசியாவே கொஞ்சம் இறைச்சிடலாமே!..!
 தேவகி : இந்தப் பகுதில புறாக்கள்தான் அதிகம்! சுற்றிவரப் பாரு!.....எத்தனை வீட்டு மாடிகள்ல உட்கார்ந்திருக்குதுன்னு! அதுகளுக்கு நெல்மணிதான் இஷ்டம்! அரிசியும் போடலாம்தான்!..பறவைகள் மேலே கருணை வச்சு எத்தனை வீடுகள்ல அதைப் போஷிக்கிறாங்க பார்த்தியா? நாமளும் அப்படி இருக்கப் பழகணும்!.
 சதீஷ் : கண்டிப்பாம்மா! இனிமே இந்த வேலையை நானே செய்றேன்!....சரியா!...தண்ணி தீரத் தீர நானே கொண்டு வந்து ஊத்துறேன்!... அதுக கூட்டமா வந்து கொத்துறதை, தண்ணி குடிக்கிறதைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கும்மா!
 தேவகி : அவ்வளவுதானே! இப்பப்பாரு!..
 (சொன்னவள் சதீஷின் கையைப் பிடித்துத் சற்று மறைவாக நின்று கொண்டாள்.....அடுத்த கணம்!.புறாக் கூட்டமொன்று எங்கிருந்துதான் வந்ததோ!....ஒன்றன் பின் ஒன்றாக அப்படிச் சூழ்ந்து கொண்டன!...பக்!....பக்!....பக்!...ம்ம்!ம்ம்!ம்ம்!என்ற அவைகளின் படிந்த ஓசை சதீஷை குஷிப்படுத்தியது! -- பள்ளியிலும் க்ராஃப்ட் பீரியடின் போது இம்மாதிரிச் செய்யலாமே என்று அவன் சிந்தனை போனது. அன்று மதியத்திற்கு மேல் இருக்கும் கடைசி கைவினை வகுப்பு அவன் நினைவுக்கு வந்தது. பள்ளியைச் சுற்றியிருக்கும் வேப்ப மரங்களின் அடியில் வீழ்ந்து கிடக்கும் வேப்பம் பழங்களைப் பொறுக்கச் சொன்னதும், அப்போது பறவைகள் சில அங்கு ஓரமாய் இருந்த வற்றிய நீர் வாய்க்காலில் தண்ணீருக்குப் போட்டி போட்டதும் அவன் பார்வையில் படமாய் ஓடின. அன்றைய வகுப்பில் அம்மாவின் அந்த தண்ணீர் வைக்கும் வழிமுறையை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் சதீஷ்! --)
 திரை
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com