சமய சஞ்சீவினி - சீத்தா மரம்

 நான் தான் சீத்தா மரம் பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் அன்னோன்னா ஸ்க்காமோசா. நான் அன்னோனாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  தைவான் நாட்டு மக்கள் என்னை புத்தர் தலை என அழைக்கிறாங்க
சமய சஞ்சீவினி - சீத்தா மரம்



என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் சீத்தா மரம் பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் அன்னோன்னா ஸ்க்காமோசா. நான் அன்னோனாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  தைவான் நாட்டு மக்கள் என்னை புத்தர் தலை என அழைக்கிறாங்க. ஈழத் தமிழர்கள் என்னை அன்னமுன்னா பழமுன்னு சொல்வாங்க. 

 நான் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரை வளருவேன். என் இலைகள் பச்சையாக, அகலம் சிறியதாக, நீளம் அதிகமாக இருக்கும். என் பூக்கள் முன் பச்சையாகவும், பின் மஞ்சள் நிறமாக மாறும்.  பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும் பின் பிஞ்சுகள் விட்டு உருண்டையாக ஆப்பிள் போன்று காயாக மாறும்.  என் பழத்தின் மேல் தோல் சிறு சிறு அறைகள் போன்று அமைந்திருக்கும். காய் முற்றினால் சாம்பல் நிறமாக மாறும். அப்போது அதை பழுக்க வைத்து நீங்கள் உடனே சாப்பிடலாம். பழத்தை பிரித்தால் வெண்மையான சதை கொட்டைகளை மூடியிருக்கும். அந்த வெண்மையான பாகம் தான் உங்களுக்கு ருசியாக இருக்கும். 

 என் பழத்தில் நீர், புரோட்டீன், கொழுப்பு, மாவு, நார் சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ், ரிபோபுளேவின், ரியாசின், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் சி என பல்வேறு சத்துகள் உள்ளன.  என்னிடம் இதயம் பலம் பெறவும், ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படவும் சத்துகள் இருக்கு.  
 குழந்தைகளே, என்னை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் எலும்பு, பல் உறுதியாகும். செரிமானம் ஏற்பட்டு, மலச்சிக்கல் குணமாகும். குளிர்கால காய்ச்சல் குணமாகும்.  என் பழத்தை உட்கொண்டால் தலைக்கும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.  இதன் மூலம் உங்களின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். என்னை ஆங்கிலத்தில் கஸ்டர்ட் ஆப்பிள்னு கூப்பிடுவாங்க. ஏன்னா, ஐஸ்கிரீம் போன்ற சுவை இருப்பதால் என்னை அப்படி கூப்பிடறாங்க. சாப்பிட்டவுடன் இனிப்பு. எடை குறைவாக உள்ளவர்களின் உடல் எடை கூடும்! அதனால் குழந்தைகளே, என் பழத்தை சாப்பிடுங்கள், ஜீரண சக்தி அதிகரிக்கும், இனிப்பு சுவையுடன் நார்ச்சத்தும் இருப்பதால் சர்க்கரை அளவு கூடாது.  பித்தம், வாந்தி, பேதி, தலைச்சற்றல் ஆகியவற்றையும் என் பழம் குணப்படுத்துவோடு உங்கள் மன அழுத்தத்தையும் சரி செய்யும். இரவில் ஒரு பழத்தை சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல தூக்கம் வரும். என் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா, சொல்ல, சொல்ல எனக்கு மூச்சு முட்டுதே. 

 என் பழத்திலிருந்து பவுடரும் தயாரிக்கிறாங்க.  என் பழத்தின் சதைப் பகுதியிலிருந்து குளிர்பானம் தயாரிக்கிறாங்க. குழந்தைகளே, தப்பா நினைக்காதீங்க, என் பழத்தில் 16.5 சதவீதம் சர்க்கரை சத்து இருப்பதால் குண்டானவங்க சாப்பிடாதீங்க. என் பழத்தை  அதிக நாள் வைத்து சாப்பிடாதீர்கள், அழுகிடும்.

 என் இலை சயரோக நோயை குணப்படுத்துவதுடன்,  கசாயம் வைத்துக் குடித்தால் அல்சர் குணமாவதுடன் வயிற்றுப் போக்கு போயே போயிடும்.  என் இலையை அரைத்துப் புண்கள் மீது தடவினால், புண்கள் குணமடையும். 
 என் விதை, பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுது. இதைப் பொடி செய்து தலைக்குக் குளித்தால் பேன் தொல்லையே இருக்காது.  என் விதையில் 30 சதவீதம் எண்ணெய் இருப்பதால், சோப்பு தயாரிக்கவும், கூந்தல் தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க.  உங்கள் மேனியை பளபளப்பாக்குவதில் என் விதைத் தூள் முக்கியப் பங்காற்றுகிறது. என் விதையிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உங்களுக்கு உற்சாகம் பொங்கும். மரங்கள் இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம். இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபாத்திரத்தை அழிக்காமல் தடுக்க உறுதி எடுப்போம். நான் தமிழாண்டு துன்மதியை சேர்ந்தவன். நன்றி குழந்தைகளே! மீண்டும் சந்திப்போம் !
(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com