உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
நீர் நிலை வற்றிய நிலைதனைக் கண்டார்
சீர் அமைக்கச் சிந்தனை வந்தது!
ஊர்மக்கள் கூடி நீர் நிலைகளை
தூர்வாரத் தீர் மானித் தனரே!
நிதிப் பற்றாக்குறை என்ன செய்வது?
திகைத்து நின்றனர் ஊரில் அனைவரும்!
"ராஜம்மாள்' என்ற ஒரு பெண்மணி
தான் சேமித்த பத்தாயிரம் பணத்தை
ஊர் செழிக்க உவந்து அளித்தார்.
மெத்தப் புகழ்வோம்!.... மேலும் இது கண்டு
புத்தகம் சுமக்கும் பள்ளி மாணவி
நான்காம் வகுப்பு நன்கு பயிலும்
"அனுஷ்கா' என்றோர் அருமைச் சிறுமி
அவர் சேமித்த பணம் இரண்டாயிரத்தை
முன் வந்து கொடுத்தார் மகிழ்ச்சியுடன்
நீர்நிலை தூர்வாரும் பணிமிகச் சிறக்க!
"சக்திவேல்' மாணவன் தமதரும் பங்காய்
மக்கள் பயனுற மனம் உவந்து ஈந்தான்!
தன்சேமிப்புப் பணமிரண் டாயிரத்தை!
ஊரெலாம் வியந்தது மூவரின் செயலால்!
நீர் வளம் பெருகி நிம்மதி அடைய
ஊர்நலம் ஒன்றே உயர்வென எண்ணி
மூவரும் உதவினர்! ஊர் முனைந்தது செயலில்!
முயற்சி வென்றது அனைவரின் கூட்டால்!
தன்னலம் இன்றித் தம்மரும் மக்கள்
இன்னல் களைந்து என்றும் வாழ்ந்திட
கண்ணாய்ப் பணத்தைக் கொடுத்து உதவிய
மூவர் செயலை மனமுவந்து போற்றுவோம்!
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று, அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...