குயில்கள் கூவும் ஒரு சிற்றூர் - புதுவை
கூனிச்சம்பட்டு அதன் பெயராம்!
பாட்டுப் பறவை பாவேந்தர்
பணியாற்றிய பள்ளி அவ்வூரில்!
எங்கும் தூய்மை எதிலும் தூய்மை
என்பதே இந்தப் பள்ளியின் குறிக்கோள்!
அதனை நோக்கிய அயரா உழைப்பு! - அதிலே
ஆசிரியர் கண்டார் இதயக் களிப்பு!
வகுப்பறை,....கழிப்பறை,... நடக்கும் பாதைகள்
சுற்றுச் சவர்கள் எல்லாம் தூய்மை!!
நல்ல குடிநீர்!.... நிழல் தரும் மரங்கள்!
சுவர்கள் எங்கும் வண்ண ஓவியங்கள்!
அரும்புகள் விரும்பிக் கற்கும் சூழல்
அன்பெனும் சிறகுடன் இயங்கிய ஆசிரியர்!
விரும்பி வந்து உதவும் ஊரார்!
வெற்றியை நோக்கிச் சென்றது பயணம்!
பாரதம் எங்கும் இயங்கும்பள் ளிகளில்
""பளிச்!'' செனத் தூய்மையில் இப்பள்ளி முதலிடம்!
ஆராய்ந்து கண்டது மத்திய அரசு!
அதற்கென அளித்தது உயரிய விருது!
பாவேந்தர் அரசு தொடக்கப்பள்ளி - இன்று
பள்ளிக்கு இலக்கணம் படைத்த நற்பள்ளி!
அதற்கு அடிப்படை ஆசிரியர் தொண்டு! - நான்
அன்போடு அளிப்போம் பாராட்டுச் செண்டு!