பேரறிஞர் பெர்னாட்ஷா வயலுக்குச் சென்றார்
பெருவெளியில் வரப்பினிலே நடப்பதிலே மகிழ்ந்தார்!
எங்கெங்கும் இயற்கை எழில் கொஞ்சுவதைக் கண்டார்
இன்பமென்றால் இது இன்பம் என அவரும் நெகிழ்ந்தார்
எதிர் வந்தான் ஒரு மனிதன் கைகளையே வீசி-அவர்
இணையில்லா அறிஞர் எனத் தெரிந்து கொண்டான்
அறிஞர் எனத் தெரிந்தாலும் தாழ்வு செய்ய
அவன் நினைத்தான் அருகினிலே சென்றான்
ஐயா என் எதிரினிலே முட்டாள் வந்தால்
அவருக்கு வழியில்லை. மறிப்பேன் நான் என்றான்!
உள்ளத்தில் நகைத்திட்டார் உயர்ந்த செம்மல்
ஒரு நொடியில் அவனுக்குப் பதிலைச் சொன்னார்!
என் எதிரே முட்டாளைக் கண்டேனென்றால்-நான்
எளிதாக வழி விடுவேன்! என்றே சொல்லி
தரையிறங்கி வயல்வெளியில் நடந்து சென்றார்!
தாழ்வு செய்ய எண்ணியவன் தலை குனிந்தான்!