விவேகானந்தர் ஒரு அன்பர் வீட்டிற்குச் சென்றார்.
""அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றோடு இருப்பதுதான் இறைவன் மீது செலுத்தம் உண்மையான பக்தி என்கிறீர்கள்!..... இவையெல்லாம் மனிதர்களிடம் இருந்து விட்டால் கோயில்கள், விக்ரகங்கள், வழிபாடுகள் எல்லாம் தேவையில்லைதானே?'' என்று விவேகானந்தரைச் சந்திந்த அன்பர் கேட்டார்.
விவேகானந்தர் பதில் சொல்லாமல் அவரிடம், ""குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தருகிறீர்களா?...'' என்று கேட்டார்.
அன்பர் விரைந்து சென்று சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
விவேகானந்தர் அன்பரிடம், ""நான் குடிக்க தண்ணீர்தானே கேட்டேன்!....எதற்கு சொம்பையும் கொண்டு வந்தீர்கள்?'' என்றார்.
அன்பர் திகைத்தபடி, ""தண்ணீரை ஒரு பாத்திரம் இல்லாமல் தனியாக எப்படிக் கொண்டு வந்து தர முடியும்?'' எனக் கேட்டார்.
விவேகானந்தர் தொடர்ந்து, ""தண்ணீர் கொண்டு வருவதற்கு சொம்பு எப்படி பயன் படுகிறதோ, அது போலவே கோயில்களும், விக்ரகங்களும், ஆராதனைகளும், வழிபாடுகளும் மனிதர்களிடத்தில் அன்பு, கருணை, இரக்கம், ஆகியவற்றைக் கொண்டு வரப் பயன்படுகின்றன! '' என்றார்
விவேகானந்தரின் பதிலில் அன்பர் தெளிவு பெற்றார்!