ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு சமயம், அவர் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஓர் இளைஞன் ஓயாமல் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் வெளிவிடும் புகை இராஜேந்திர பிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்து கொண்டிருந்தது. அது அவருக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.
அவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அந்த இளைஞனை நோக்கி, "தம்பி நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் செந்தமானதுதானே?' வேறு யாருடையதும் அல்லவே?'' என்று கேட்டார்.
அந்த இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறு, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானதாக அல்லாமல் உங்களுடையதாகவா இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
"தம்பி, அதைத்தான் உனக்குச் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்குச் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், நீ உனக்குச் சொந்தமான சிகரெட் புகையை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்!'' என்றார் பெருந்தன்மையுடன் இனிய குரலில் ராஜேந்திர பிரசாத்.
அதற்குப் பிறகு புகைவண்டியை விட்டு இறங்கும் வரையில் அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை.
- மு.பெரியசாமி
("சிரிக்க }சிந்திக்க - மேதைகளின் நகைச்சுவை' என்ற நூலிலிருந்து...)