அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் தனது பதவிக்காலத்தில் ஒரு நாள் ஓய்வெடுக்க நினைத்தார். அவர் செல்ல நினைத்தது சற்று குளிரான பிரதேசம். அவருக்குப் பிடித்த காரோட்டி டேவிட் தாமஸூக்கு அன்று விடுமுறை நாள். அவர் தனது காரோட்டியைக் கூப்பிட்டு, ""டேவிட்!... இன்று என்னுடன் வர இயலுமா?'' எனக் கேட்டார். ஜனாதிபதி மீது அன்பு கொண்ட காரோட்டி டேவிட் தாமஸூக்கு அவரது வேண்டுகோளை மறுக்க இயலவில்லை. டேவிட் அவருக்குக் காரோட்ட சம்மதித்தார்.
கார் சென்று கொண்டிருந்தது. பாதி வழியில் காரோட்டிக்கு வயிற்று வலி ஏற்பட்டது!அவர் தவித்தார்! இதைக் கவனித்த ரூஸ்வெல்ட் காரோட்டியை பக்கத்தில் உட்காரச் சொன்னார். காரை ஜனாதிபதியே ஓட்டினார்! கார் ஒரு மருத்துவ மனையை அடைந்தது! அங்கு காரோட்டியை சிகிச்சைக்குச் சேர்த்தார். சிகிச்சை நடந்து கொண்டிருந்தது!
மருத்துவ மனை ஊழியர்கள், சிகிச்சை பெறுபவரின் பெயரையும், கொண்டு சேர்த்தவரின் பெயரையும் அங்குள்ள குறிப்பேட்டில் எழுதச் சொன்னார்கள். அவர்களுக்கு வந்திருப்பது யாரென்று தெரியவில்லை!
குறிப்பேட்டில், டேவிட் தாமஸ், வயது 42, என எழுதிவிட்டு தாமஸின் முகவரியையும் எழுதினார். பின்பு மே.பா. ரூஸ்வெல்ட், வெள்ளை மாளிகை, வாஷிங்டன். என எழுதினார்.
மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது! அப்போதுதான் அவர்களுக்கு வந்திருப்பது அமெரிக்க ஜனாதிபதி என்று தெரிந்தது!
""ஐயா, உங்களது கடமை உணர்ச்சியையும், பொறுப்பையும், இரக்க குணத்தையும், நல்ல சுபாவத்தையும் கண்டோம்!... எங்களை மன்னியுங்கள்!''
அதற்கு ரூஸ்வெல்ட், ""எனது செயலைப் பாராட்டியதற்கு நன்றி!.... நீங்கள் குறிப்பேட்டில் தகவல்களைக் கேட்டுப் பெறுவதும், அத்தகைய பொறுப்பும், கடமை உணர்வும் கொண்டதே!....'' எனக் கூறிப் புன்னகைத்தார்.
காரோட்டி உடல் நலம் பெற்று காருக்குத் திரும்பினார்.
""டேவிட் தாமஸ்!.... நீ இன்னும் சற்று ஓய்வெடுத்துக் கொள்... இன்றைய சர்வீஸ் என்னுடையதாக் இருக்கட்டும்!'' என்று கூறி காரை ஸ்டார்ட் செய்தார்.
கார் மறையும் வரையில் மருத்துவ மனை உழியர்கள் அதை நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.