தாத்தா கதையும், பாட்டியின் பாட்டும்
"தா....தா'' எனவே கேட்டிருந்தோம்!
நேத்தா, இன்றா, எத்தனை காலம்
நெஞ்சில் கட்டிப் போட்டிருந்தோம்!
ஆத்தா,.... அம்மா.... அடிக்க வந்தால்
அவர்கள் பின்னே ஒளிந்திருந்தோம்!
ஆசை முத்தம் கொஞ்சும்போது
அவர்கள் மடியில் மகிழ்ந்திருந்தோம்! - அவர்கள்
சேர்த்தே வைத்த காசில் வாங்கி
சுவையாய் பண்டம் தின்றிருந்தோம்!
சேர்ந்தே சிரித்து, சுகத்தைச் சேர்த்து
சொந்தம் இதுவே என்றிருந்தோம்!
பார்த்தால் இனிக்கும் சிரிப்பைக் கண்டு
பலநாள் பசியை மறந்திருந்தோம்!
பாசத்தாலே ஊட்டும் சோற்றில்
கண்ணீர் உப்பாய்க் கலந்திருக்கும்!
ஒரு நாள் அப்பா,... அம்மா,... அவர்களை
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்!
தாத்தா கதையும் பாட்டியின் பாட்டும்
யாரிடம், ""தா!தா!...'' எனக் கேட்போம்?
உறவுகள் என்பது ஆலமரம் - அந்த
உணர்வுகள் எப்படி மரத்துவிடும்!
உயிரைக் கொடுத்த ""சாமி'' அவர்களை
உடனே அழைக்கணும்!... முடிந்திடுமோ?
வெ.தமிழழகன்