உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
பாராட்டுப் பாமாலை! 53
கோவை மா வட்டத்தினிலே
வடி வேலம்பாளையத்தில்
வாழ்கிறார் ஒரு மூதாட்டி!
வயதோ அவர்க்கு எண்பது!
இட்டிலிக்கடை வைத்துள்ளார்!
இன்னமும் அவர் கரங்கள்
ஆட்டுக்கல்லைச் சுற்றுகிறது!
அம்மியில் அழகாய் அரைக்கிறது!
மிகமிக மலிவாய் இட்டிலிகள்!
மல்லிகைப்பூ போன்றிருக்கும்!
மணக்கும் சட்டினி ஆளிழுக்கும்!
மனிதர் வயிறு நிறைந்து விடும்!
விலையோ மிகவும் மலிவாகும்!
ஓர் இட்டிலி..., ஒரே ரூபாய்!
ஆச்சரியமாக இருக்கிறது!
ஆனால் உண்மை நம்புங்கள்!
வறுமை கொண்டோர், வயதானோர்
உழைக்கும் மக்கள், ஏழைகள்
அனைவர் பசியும் ஆறுதம்மா!
ஆறுதல் அளிப்பவர் கமலாத்தாள்!
"வாழ்நாள் முழுதும் இதைச் செய்வேன்!
விலையோ நிச்சயம் ஏறாது!.....
கடவுள் எனக்குத் துணையிருப்பார்! - என்
கடமை இதனைச் செய்வேன் நான்!''
என்கிறார் பாட்டி கமலாத்தாள்!
காசைக் கருத்தாய்க் கொள்ளாமல்
கடமையைச் செய்யும் இவரை நாம்
கரங்கள் கூப்பி வணங்கிடுவோம்!
ஆர்.தீனதயாளன்
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...