நினைவுச் சுடர் !
அந்த இளைஞனுக்குப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்! ஆனால் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தான். பில்க்ரிம்ஸ் ப்ரோக்ரஸ், யோசேப் கதைகள் போன்றவற்றை அந்தச் சிறுவன் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் சென்று இரவல் வாங்கி வந்து படித்துவிட்டுத் திருப்பித் தந்து விடுவான்.
ஒரு முறை இளைஞன் அருகிலிருந்த பண்ணை வீட்டில் ஒரு புத்தகத்தைப் பார்த்தான். அதைப் படிக்க சிறுவனுக்கு ஆவல் மேலிட்டது. பண்ணையின் சொந்தக் காரரிடம் அந்தப் புத்தகத்தை தனக்கு இரவலாகச் சிறிது நாட்கள் தந்து உதவும்படியும், படித்துவிட்டுத் திருப்பித் தந்து விடுவதாகவும் உறுதி அளித்தான்.
பண்ணையாரும் புன்னகையுடன் அதை இளைஞனுக்கு அளித்தார். அப்போது நல்ல மழைக்காலம். புத்தகமோ பெரியதாக இருந்தது. வீட்டில் இளைஞனுக்கு வேலைப் பளு சற்று அதிகமாக இருந்தது. புத்தகத்தைக் கூரையில் செருகி வைத்து விட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
ஓரிரு நாட்கள் சென்றன. கூரையில் செருகியிருந்த புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தான் இளைஞன். இளைஞனுக்கு அதிர்ச்சியாக இருந்தது! புத்தகம் கரையானால் அரிக்கப்பட்டிருந்தது! செய்வதறியாமல் விழித்தான் இளைஞன்.
உடனே பண்ணையாரிடம் சென்றான். புத்தகம் செல்லரித்துவிட்ட விஷயத்தைச் சொன்னான்.
அவரோ, இளைஞனைப் பார்த்துப் புன்னகையுடன், "அதனால் என்ன!..... பரவாயில்லை!....'' என்றார்.
ஆனால் இளைஞன் விடவில்லை.
"என் மனசாட்சி என்னை உறுத்திக்கொண்டே இருக்கும்!.... இருந்தாலும் என்னால் அந்தப் புத்தகத்தின் மதிப்பைப் பணமாகத் தர
இயலுமா என்று தெரியவில்லை..... புத்தகத்தின் மதிப்புக்கு ஈடாக வேறு ஏதேனும் என்னிடமிருந்து தாங்கள் வாங்கிக் கொண்டால்தான் என் மனம் நிம்மதியாக இருக்கும்!" என்றான்.
"எனக்கு அதில் விருப்பமில்லை..... இருந்தாலும் உன் மன நிம்மதிக்காக என் வயலில் அரை நாள் வேலை செய்தால் போதுமானது.... அந்த உழைப்பை நான் புத்தகத்துக்கு ஈடாக எடுத்துக் கொள்வேன்!'' என்றார் பண்ணையார்.
இளைஞனும் சந்தோஷத்துடன் வயலில் வேலை செய்து புத்தக மதிப்பை ஈடு செய்தான். பண்ணையார் கொள்கையுடன் இருநத அந்த இளைஞனைப் பாராட்டினார். அந்த இளைஞன்தான் பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ஆபிரஹாம் லிங்கன்!
முக்கிமலை நஞ்சன்