நினைவுச் சுடர் !
தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற சிரிப்பு நடிகர் நாகேஷிடம், ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி காண வந்தார். அப்போது அந்தப் பத்திரிகையாளர் நாகேஷிடம், "உங்கள் முகம் இப்படி அம்மைத் தழும்புகளுடன் இருக்கிறதே. அது உங்கள் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறதா! உங்கள் முகத்தில் இது மாதிரி குறை இருப்பதை எண்ணி நீங்கள் கவலைப்படுவதுண்டா?'' ‘‘ என்றுகேள்வி கேட்டார்.
அதற்கு நாகேஷ், "இல்லை.... நான் எப்போதும் இதை ஒரு குறையாக நினைத்ததே இல்லை. அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் அம்மிக்கல்லைப் பாருங்கள்! அது நன்றாக அரைக்க வேண்டி அதை அடிக்கடி கொத்தி விடுவார்கள்! அப்போதுதான் அது நன்றாக அரைக்கும்! அதே போல்தான் ஆண்டவனும் இந்த முகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறான்! அப்படித்தான் நான் நினைக்கிறேன்! சொல்லப்போனால் இந்த மாதிரி முகம் இருந்ததால்தான் நான் இந்தத் திரைப்பட உலகில் முன்னேறியிருக்கிறேன் போலிருக்கிறது!.... இந்த முகத்திற்காக நான்ஆண்டவனிடம் நன்றி கூறுகிறேன்! ''‘‘ என்று கூறினார்.
தன்னுடைய குறையையே நிறைவாக நினைக்கும் அவருடைய தன்னம்பிக்கையைப் பார்த்து வியந்து போனார் அந்த நிருபர்!
மயிலை மாதவன்