கார்னகி என்ற சிறுவனது குடும்பத் தொழில் நெசவு. ஆனால் தொழில் ரொம்பவும் நொடித்து விட்டது. சிறவன் பிழைப்புக்காக அமெரிக்கா வந்தான். அங்கு அவன் தந்தி ஆபீஸில் தந்தியைக் கொண்டுபோய்க் கொடுக்கும் வேலையில் சேர்ந்தான். அப்போது கார்னகிக்கு வயது பதினான்குதான்!
தன் வேலையில் திறமையைக் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவனுக்கு இருந்தது. எனவே, சுறுசுறுப்பாக நகரின் தெருக்கள், முக்கியமான கம்பெனிகள், முக்கியமான நபர்களின் இருப்பிடங்கள் அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டான். இதனால் அவனால் தந்திகளை சீக்கிரத்தில் கொண்டுபோய்க் கொடுக்க முடிந்தது. ஒரு வருடம் இவ்வாறு சுறுசுறுப்பாக வேலை செய்தான். தந்தி ஆபீஸில் வாரச்சம்பளம்தான் கொடுப்பார்கள்.
ஒரு வார இறுதி நாள். எல்லா தந்தி வினியோகம் செய்பவர்களும் சம்பளம் வாங்குவதற்காக வரிசையில் நின்றார்கள். கார்னகியின் முறை வந்தது! ஆனால் சம்பளம் கொடுப்பவர் சம்பளத்தைக் கொடுக்காமல் தள்ளி நிற்கும்படி சொன்னார்.
சிறுவன் கார்னகிக்கு கண்களின் நீர் வந்து விட்டது. கலக்கமாகவும் இருந்தது. தனக்கு உத்தியோகம் போய்விட்டது என நினைத்து அச்சமாகவும் இருந்தது!
சம்பளம் வாங்கிக்கொண்டு அனைவரும் சென்று விட்டனர். மானேஜர் கார்னகியை அருகில் அழைத்தார்.
""மற்ற எல்லாப் பையன்களும் சேர்ந்து செய்யும் வேலையை நீ ஒருவனே செய்து விடுகிறாய்!..... அதனால் உனக்கு இரண்டேகால் டாலர் அதிக சம்பளம் தர உத்தரவு வந்திருக்கிறது!''
சிறுவன் கார்னகியில் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! பின்பு ஓரிரு வருடங்கள் வேலை பார்த்த பிறகு பல்வேறு இடங்களில் கூலி வேலை பார்த்தார். தன் திறமையால் ரயில்வேயில் டிவிஷனல் சூப்பரின்டென்ட் ஆனார்! பிறகு அயராத முயற்சியினால் இரும்புத் தொழிற்சாலை ஆரம்பித்தார். அமெரிக்காவின் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆனார்!
தன் கோடிக்கணக்கான டாலர்களை தர்மங்களுக்கும், நற்பணிகளுக்கும் ஒதுக்கினார்.
இன்று ஏறத்தாழ அமெரிக்காவின் எல்லா நகரங்ளிலும் நூல் நிலையங்களுக்குக் கட்டடம் கட்டிக் கொடுத்திருப்பது கார்னகி செய்த தர்மங்களில் மிகவும் முக்கயமானது ஆகும்.