முத்துக் கதை!
ஒரு சமயம் புத்தர் மலைகள் இருந்த பாதையில் சென்று கொண்டிருந்தார்.
அங்கு ஓர் இடையன் கையில் கோலுடன் ஆட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு சென்றான்.
அந்த சமயத்தில் மலையின் ஒரு குறுகலான பாதையில் ஆட்டு மந்தை சென்றுகொண்டிருந்தது. பாதை மிகவும் குறுகலாக இருந்தது.
இடையன், ஆடுகள் விரைவில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவைகளை உரத்த குரலில் விரட்டினான். அதனால் ஆட்டு மந்தையிலிருந்த ஒரு ஆட்டுக்குட்டி ஒரு பாறையைத் தாண்டிக் குதித்தது! ஆனால் அப்போது பாவம்!.... அந்த ஆட்டுக்குட்டியின் கால் ஒடிந்து போயிற்று!
அப்படியும் இடையன் அந்த ஆட்டுக்குட்டியின் நிலமையைப் பொருட்படுத்தவில்லை. மேலும் சத்தம் போட்டு அந்த ஆட்டுக் குட்டியை விரட்டினான்.
சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த புத்தர் இந்தக் காட்சியைக் கண்டார். அவருக்கு நெஞ்சம் பதைபதைத்தது! துடித்துப் போய்விட்டார்! அந்த ஆட்டுக்குட்டிக்கு உதவி செய்ய நினைத்தார். ஆட்டுக்குட்டியின் அருகில் சென்று அதை அன்புடன் அள்ளிக் கையில் எடுத்துக் கொண்டார்.
மேலும் புத்தர் கால் ஒடிந்த அந்தக் குட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு, ஆட்டுமந்தையுடன் சேர்ந்து தானும் நடந்து சென்றார்.
இடையன் அவரது செய்கையைக் கண்டு, தன் தவற்றை உணர்ந்து அவரை நமஸ்கரித்தான்.
புத்தர் இடையனிடம்,, "உலகில் துன்பத்தில் துடிக்கும் ஓர் உயிரின் துன்பத்தைப் போக்க வேண்டும். இமயமலையில் தனிமையில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதைவிட கருணை கொள்ளும் உள்ளம் மிக மேலானது!'' என்று கூறினார்.
நீதிக்கதைகள் நூலில்
சுவாமி கமலாத்மானந்தர்