கதை பாடல்
அதுவொரு அழகிய ஆலமரம்
அதிலே வாழ்ந்தது ஒரு காகம்! - அங்கு
புதிதாய் வந்த ஆந்தைக்கோ
பகலில் பார்வை தெரியாது!
ஒரு நாள் இரண்டும் அருகருகே
உட்கார்ந்து பேசும் வேளையிலே - தம்
திருவாய் மலர்ந்து இனிதாக
தீர் மானமொன்றைப் போட்டனவே!
தலைமுறை, தலைமுறை, தலைமுறையாய்
இருவரும் இருந்தோம் தனித்தனியாய்! - இனி
பழையன கழிதல் நாம் செய்து
பகைமை மறப்போம் இதுமுதலாய்!
இரவில் உனக்குக் கண் தெரியும் - இரை நீ
எடுத்து வா! நம் பசி மறையும்!
பகலில் பறந்து நான் சென்று
நமக்கு உணவை நான் கொணர்வேன்!
என்றே முடிவு செய்துவிட்டு
இணைந்து வாழத் தொடங்கினவாம்!
இதனைக் கண்ட மரம் கூட - தன்
கிளைக்கரம் கொண்டு வாழ்த்தியதாம்!
இரண்டும் திரிந்து இரை எடுக்கும்!
பசி போக்கி, உதவி, மனம் களிக்கும்! - தினம்
ஒருவர்க்கொருவர் உதவி செய்து
ஒற்றுமையாய்ச் சேர்ந்து வாழ்ந்தனவே!
வளர்கவி