வந்து வந்து வீசவேண்டும்
வாசம் உள்ள தென்றலே!
சிந்து சிந்தும் குயிலின் பாட்டைத்
தந்து செவியில் ஊட்டுக!
சாமரம் நீ வீச வேண்டும்
பூமரங்கள் மூலமாய்!
மா மரங்கள் கனியும் இள
வேனில் தந்த தென்றலே!
குட்டித் தம்பி விட்ட பட்டம்
எட்டி எட்டிப் பறக்கவே
தொட்டு நீயும் உயரே ஏற்ற
தோழன் போல உதவு நீ!
இலைகள் யாவும் குலுங்க வைத்து
இசையை வழங்கு தென்றலே!
அலைகள் யாவும் ஊஞ்சலாக்கி
ஓடம் ஆட வருக நீ!
வளைவில் லாத காட்டு மூங்கில்
துளையில் நுழையும் பொழுதிலே
விளையும் நாதம் கேட்பதற்கு
வீச வேண்டும் தென்றலே!
அங்கும் இங்கும் எங்கும் தங்கி
ஆண்டவன் போல் வாழ்கின்றாய்!
எங்கள் மூச்சில் கலந்ததாலே
இயக்கும் மகா சக்தி நீ!