நெல்லைக் குத்தி உமி நீக்கி
எடுத்த அரிசியில் சோறாக்கி
நெய்யில் பிசைந்து உண்பதுதான்
நெஞ்சுரம் தருமே அறிந்திடுக!
கம்பை இடித்துக் களியாக்கி
கட்டித் தயிரில் கூழாக்கி
மாவடு கடித்து உண்பதுதான்
மகிழ்ச்சி தந்திடும் அறிந்திடுக!
சோளம் குத்திச் சோறாக்கி
சொட்டும் மோரில் கூழாக்கி
காலை, மாலை அருந்துவது
கனலைப் போக்கும் அறிந்திடுக!
கோதுமை குத்தி உமி நீக்கி
கொதிக்கும் உலையில் அதைப் போட்டு
கொஞ்சம் வெந்ததும் அவலாக்கி
கொள்வது பலம் தரும் அறிந்திடுக!