திருக்குறள் கதைகள் - 14 தொகுதிகள் (படவிளக்கங்களுடன்); பட்டத்தி மைந்தன் (சிவபாரதி); தொகுதி-4, பக்.88; தொகுதி-14, பக்.56; மற்ற தொகுதிகள் அனைத்தும் பக். 104; ஒவ்வொரு நூலும் ரூ.100; வெளியீடு: கோரல், எண்.8, 6ஆவது குறுக்கு, 8-ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை-109; 9043050699.
திருக்குறள் கருத்துகளை வைத்து மிகவும் வித்தியாசமாக, சிறார்கள், மாணவர்கள் விரும்பும் ஓவியங்களுடன், படக்கதையாக வெளிவந்திருக்கின்றன. மொத்தம் பதினான்கு தொகுதிகள். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அதிகார வரிசைப்படி முதல் பத்து, இரண்டாம் பத்து என 14 தொகுதிகளிலும் அதிகாரத்துக்குப் பத்து குறட்பாக்களாக பத்து பத்து படக்கதைகள் இடம்பெற்றுள்ளன.
கண்ணைக் கவரும் வண்ண அட்டைப் படங்களுடன், குறளையும், அதற்கான விளக்கத்தையும் வெகு சுருக்கமாக சித்திரக் கதையாக, விளக்கியுள்ளதுதான் இத்தொகுப்பின் தனிச்சிறப்பு. திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்வு மிகவும் சிறப்பாக அமையும் என்பதை இன்றைய மாணவர்கள் மனதில் எளிய முறையில் பதிய வைக்கும் இந்தத் தொகுப்பு ஒவ்வொரு பள்ளி நூலகங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பாகும்.
சுட்டிக் கதைகள் - நீலாவதி; பக்.112; ரூ.125; வெளியீடு: சுருதிலயம், 14, வைகை தெரு, பாரத் நகர், ஆதம்பாக்கம், சென்னை-88; 9444124285.
இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் வழுவழுப்பான தாள்களுடன், மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ண வண்ணப் படங்களுடன், நேர்த்தியான வடிவமைப்புடன் உள்ளது. உடனே படிக்கத் தூண்டும்! இந்நூலாசிரியர் ஏற்கெனவே சிறுவர்களுக்கான பாடல்களும், கதைகளும் நிறைய எழுதியவர். இதிலுள்ள ஒவ்வொரு கதையிலுமே ஒவ்வொரு நீதியைச் சொல்லி கதை நடக்கும் இடத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறார். பாட்டி சுட்ட வடை கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் எலி சுட்ட வடை இந்நூலில் உள்ளது. அதுமட்டுமா, சிறாருக்குப் பிடித்த மின்மினி, மயில், குயில், யானை, பூனை, கரடி, நரி, ஆடு எல்லாம் கதாப்பாத்திரங்களாக வலம் வந்து நமக்கு நீதியைச் சொல்கின்றன. மொத்தம் பதினாறு பல்சுவைக் கதைகள். அத்தனையும் அற்புதம்!