அறிஞர் வேங்கை எல்லாம் தெரிந்தவர் - மக்கள்
ஐயம் என்றால் அவரிடம் வருவர்!
அறியாத ஒன்று எதுவும் இல்லை - என
அளவுக்கு மேலே நம்பிக்கை வைத்தனர்!
வேங்கை மக்கள் ஐயம் தீர்ப்பார் - அதை
விரும்பி ஏற்று... வீட்டுக்குச் செல்வர்!
மக்கள் கூட்டம் பெருகிச் சேர்ந்தது - அவர்
மனத்திலும் ஆணவம் முள்மரம் ஆனது!
சென்றார் பலஊர்... அங்கெல்லாம் - அறிவில்
சிறந்தோர் பலரும் சந்திப்பர்!
வேங்கையின் கேள்வி அம்புகளால் - அவர்
பூனை எனவே நழுவிடுவர்
அரசூர் என்னும் ஊர் சென்றார் - வேங்கையை
அறிந்தவர் எவரும் அங்கில்லை!
"எவர் வந்தாலும் என் கேள்வி
எளிதில் வீழ்த்தும் யார் நிற்பார்?'
குடிசை ஒன்றைக் கண்டார் வேங்கை - வாசலில்
கோலம் இட்டாள் ஒருசிறுமி!
இருளும் வந்தது விளக்கினையே
ஏற்றி வைத்தாள்... எங்கும் ஒளி!
அவளிடம் திறமையைக் காட்டுதற்கு
அருகே அழைத்தார் ""ஏ சிறுமி...
இருளில் விளக்கை ஏற்றி வைத்தாய்
எங்கிருந்து வந்தது இவ் வெளிச்சம்?''
ஒருநொடி திகைத்தாள்... மறுநொடியே - அவள்
ஓடிச்சென்று விளக்கணைத்தாள்! - ""ஐயா
இங்கே இருந்த வெளிச்சம் எங்கே?
இப்போது அதுவும் சென்றதெங்கே?''
சிறிதும் தயக்கம் இல்லாமல் - வேங்கையினைச்
சிறுமி கேட்டாள் பணிவாக - அவரிடம்
இருளாய் இருந்த ஆணவமோ - அவள்
ஏற்றிய விளக்கால் ஓடி மறைந்தது!