அப்பா குழியை வெட்டினார்
அதிலே உரத்தைக் கொட்டினார்!
குட்டிப் பிள்ளையை வைத்துமே
சுற்றி வேலி கட்டினார்!
அம்மா நடந்து சென்றுமே
அல்லிக் குளத்துத் தண்ணீரைக்
கொண்டு வந்து குடத்திலே
குட்டிப் பிள்ளைக்கு ஊற்றினாள்!
அம்மா, அப்பா உழைப்பிலே
அந்தப் பிள்ளை வளர்ந்ததை
என்றும் மறவா திருந்ததே
ஏற்ற பருவம் அடைந்ததே!
களைத்தபோது அவர்களை
கையால் தாங்கும் பிள்ளையாய்
இளநீர், வழுக்கை கொடுத்துமே
இதயம் குளிர வைத்ததே!
சக்தி யற்றே முதுமையில்
தரையில் முடங்கிய போதிலே
மட்டை, தேங்காய், பாளையை
விற்றுக் கொள்ளக் கொடுத்ததே!
நன்றி மறவா பிள்ளையே
நாட்டில் தென்னம் பிள்ளைதான்!
அந்தப் பிள்ளை போல் காக்கணும்
அம்மா, அப்பாவை நீயுமே!