கருவூலம்: மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்வோமா?

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திற்கும், அண்டை நாடான வங்காள தேசத்திற்கும் இடையில், மலைப்பாங்கான பிரதேசத்தில் உள்ளது மேகாலயா மாநிலம்.
கருவூலம்: மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்வோமா?

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திற்கும், அண்டை நாடான வங்காள தேசத்திற்கும் இடையில், மலைப்பாங்கான பிரதேசத்தில் உள்ளது மேகாலயா மாநிலம். சுமார் 300 கி.மீ. நீளமும், 100 கி.மீ. அகலமும் கொண்டது. பரப்பளவு 22,429 ச.கி.மீ. ஆகும். தெற்கு எல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. நிர்வாக வசதிக்காக இம்மாநிலம் 11 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் "ஷில்லாங்' ஆகும்.

வரலாறு!

மேகாலயா ஆரம்பத்தில் காசி, காரோ, ஜெயந்தியா ஆகிய பழங்குடியினர் வசம் இருந்தது. அவர்கள் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டிருந்தனர்.

பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் வந்தது. அவர்கள் இதை 1835 - இல் அஸ்ஸாமுடன் இணைத்தனர்.

1905-இல் வங்கப்பிரிவினையின் போது இந்நிலப்பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1912 - இல் வங்கப் பிரிவினை திரும்பப் பெறப்பட்ட போது மீண்டும் அஸ்ஸாமுடன் இணைக்கப்பட்டது.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இன்றைய மேகாலயா அஸ்ஸாமின் இரண்டு மாவட்டங்களாக இருந்தது. 1960 - இல் தனி மாநிலம் வேண்டி கோரிக்கைகள் எழும்பத் தொடங்கியது. அதனால் 1970 - இல் ஐக்கிய காசி மலைகள், ஜெயந்தியா மலைகள், காரோ மலைகள் ஆகிய பகுதிகளைக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டு பாதி தன்னாட்சி வழங்கப்பட்டது. அதன்பின் 1972 - இல் மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு முழுமையான மாநிலமானது.

புவியியல்!

மேகாலயா மாநிலம், மேற்கில் காரோ மலைகள், மத்தியில் காசி மலைகள், கிழக்கில் ஜெயந்தியா ஆகிய மூன்று பகுதிகள் உள்ளடங்கியதாகும். மேகாலயாமிதமான தட்பவெப்பம் கொண்ட மாநிலம். அதிகமான ஈரப்பதம் கொண்டது. ஷில்லாங் சிகரம் 1965 மீட்டர் உயரம் கொண்டது. தலைநகருக்குத் தெற்கேயுள்ள சிரப்புஞ்சி ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்று சாதனை படைத்துள்ளது.

காரோ மலைகள்!

இந்திய - பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காரோ மலைகள் பட்காய் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் காரோ பழங்குடியினரின் பெயரே மலைக்கும் சூட்டப்பட்டுள்ளது. இம்மலைப்பகுதி, அடர்ந்த காடுகள் உடையது. இப்பகுதி சர்வ தேச முக்கியத்துவம் வாய்ந்த, "நோக்ரெக் பயோஸ்பியர் ரிசர்வ்' வனப்பகுதியாகும்!

காசி மலைகள்!

காரோ மலைகளின் கிழக்கே அமைந்துள்ளது. இங்கு காசி மலைவாழ் இன மக்கள் வசிக்கின்றனர். காசி மலையின் உயரமான சிகரம் லும்சில்லிங் ஆகும். இச்சிகரத்தின் உயரம் 6457 அடியாகும்.

சோரா!

முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது. 2007 - ஆம் ஆண்டு மேகாலயா மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா என்று மாற்றியது. 19 - ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசால் சோரா என்ற பெயர் மருவி சிரபுஞ்சி என்று ஆனது.

சோரா, காசி மலை உச்சியின் தென் பகுதியில் வங்காள தேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழையைப் பெறுகிறது. தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.

முன்பு உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்று சோரா கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகளின்படி சோராவிற்கு அருகிலுள்ள மெளசின்ரம் என்ற ஊரே உலகிலேயே அதிக அளவு மழையைப் பெறும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. ஆனால் சோரா தன் சாதனைகளைத் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது!

சோராவில் 1861 - ஆம் ஆண்டு ஜூலையில் பெற்ற 9300 மி.மீ. மழைப்பொழிவே உலகின் அதிக அளவான ஒரு மாத மழைப் பொழிவாகும். மற்றும் சோராவில் 1860- ஆண் ஆண்டு தொடக்கம் முதல் 1961 - ஆண்டு வரை பெற்ற 26461 மி.மீ. மழைப் பொழிவே உலகின் அதிக அளவிலான ஒரு வருட மழைப்பொழிவாகும்.
மெளசின்ரம்!

கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. உலகில் அதிகமான சராசரி ஆண்டு மழைப் பொழிவைக் கொண்ட இடமாகும். இங்கு ஆண்டொன்றுக்கு 11872 மி.மி. மழை பொழிகிறது. அந்த ஊர் சோராவிற்கு 16 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது. மெளசின்ரம் 1400 மீட்டர்கள் உயரமான மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமமாகும்.

மொழிகள்!

இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் பழங்குடி மக்களின் காசி மொழி, மற்றும் காரோ மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்ட இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலையே நம்பியுள்ளது. பழத்தோட்டங்கள், பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் விற்பனையும் பெருமளவில் நடைபெறுகிறது.

ஷில்லாங்!

மேகாலயா மாநிலத்தின் தலை நகரம் ஷில்லாங். கிழக்குக் காசி மலை மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் உள்ளது. இது மலை வாழிட நகரமாகும். பிரிட்டிஷ் இந்தியாவின் அஸ்ஸாம் மாகாணத்தின் தலைநகரமாக ஷில்லாங் இருந்தது. 1972 இல் மேகாலயா மாநிலம் உருவானபோது ஷில்லாங் மேகாலயாவின் தலைநகரமானது. இந்நகரம் "கிழக்கின் ஸ்காட்லாந்து' என்று புகழப்படுகிறது.

இந்நகரம் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது. மூன்று மலைகளால் சூழப்பட்ட ஒரு மிக அழகான நகரம். அழகிய இயற்கைக் காட்சிகளுக்கும், பாரம்பரியங்களுக்கும் பெயர் பெற்றது. ஆண்டு முழுவதும் உடலுக்கும், மனதுக்கும் இனிமையான சூழலைக் கொண்டது.

வேர் பாலம்!

மேகாலயாவின் தென்பகுதியில் மரங்களின் வேரைக்கொண்டு இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களே வேர்ப்பாலங்கள் என அழைக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற காசி மற்றும் ஜெயந்தியா பழங்குடியினரால் இவை வளர்க்கப்படுகின்றன. அவர்கள் அடர்த்தியான காடுகள் வழியாக ஓடும் நீரோடைகளின் குறுக்காக வேர்ப்பாலங்கள் வளர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மரங்களின் மேல் பக்கமாக உள்ள வேர்களை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து வேர்ப்பாலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் பாலங்களை அமைக்க சுமார் 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த உயிருள்ள வேர்ப்பாலத்தை (LIVING ROOT BRIDGE) அமைக்கும் தொழில்நுட்பம் பல நூறு ஆண்டுகளாக பரிணமித்து வந்துள்ளது. இந்தப்பாலம் மரங்களின் வேர் தடிமன் கூடக் கூட வலிமை மிக்கதாக மாறுகிறது. நன்கு வளர்ந்த வேர்ப்பாலங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவை. சில பாலங்கள் 50 பேர் வரை எடை தாங்கக் கூடியவையாகவும், சுமார் 100 அடிக்கு மேல் நீளமுடையவையாகவும் உள்ளன.

இரண்டு அடுக்கு வேர்ப்பாலம்! (DOUBLE DECKER LIVING ROOT BRIDGE) சோரா அருகில் உள்ள நான்க்ரியாட் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் ஆன பாலங்களில் மிகவும் பிரபலமானது. இப்பாலம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட மிகப் பழைமையான இயற்கைப் பாலமாகும். கிழே ஓடும் நீரோடையைப் பார்த்தவாறு பாலத்தின் மீது நடந்து செல்வது ஒரு இனிய அனுபவமாகும்.

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com