விவசாயி ஒருவர் தன் கையில் கட்டியிருந்த கைக் கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவருடைய மனைவி அவருக்குத் திருமணப் பரிசாகத் தந்தது. அவர் அந்த மோட்டார் கொட்டகையைச் சுற்றி தேடிப் பார்த்துவிட்டார். ஆனால், கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.
அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து, "எனது கைக்கடிகாரம் தொலைந்துவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு பரிசு ஒன்று தருவேன்'' என்றார்.
சிறுவர்கள் ஆர்வத்துடன் மோட்டார் கொட்டகையில் தேடிப் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து 'எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.
சிறுவன் ஒருவன் மட்டும் "எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் தேடித் தருகிறேன்'' என்றான். 'சரி' என்றார் விவசாயி.
சிறுவன் அந்தக் கொட்டகையில் அமைதியாக உட்கார்ந்து தன் காதைக் கூர்மையாக்கினான். அப்போது டிக்... டிக்... என்ற சப்தம் கேட்டது. அந்த இடத்தை நோக்கிச் சென்றான். அங்கு கிடந்த கைக் கடிகாரத்தை எடுத்து விவசாயியிடம் தந்தான். அவர் சிறுவனைப் பாராட்டி "எப்படி இவ்வளவு சுலபமாகக் கண்டு பிடித்தாய்?'' என்று வியப்புடன் கேட்டார். பிறகு பரிசையும் கொடுத்தார். சிறுவன் பதில் கூறினான். சிறுவன் கூறிய பதிலில் இருந்த நீதி இதுதான்:
ஆரவாரம் இல்லாமல் அமைதியான மனநிலையில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது வெற்றியைத் தரும்.