பாலர் பாடும் பாடல்-ஈசநேசன் மகஸ்ரீ; பக்.96; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பிராட்வே, சென்னை-108; 044 -24357832.
"நம்ம கணபதி' என்று கடவுளுக்கு முதல் வணக்கப் பாடலுடன் தொடங்கும் இந்நூலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அருமையான பாடல்கள் உள்ளன. அம்மா, அப்பா, குடும்ப உறவுகள், சேமிப்பின் அவசியம், காது குத்தல் சடங்கு, மாடித்தோட்டம், தலைவர்கள், எங்கப் பள்ளி, மழை, சைக்கிள் வண்டி, இயற்கை, விடுகதை, சாலை விதி, எறும்பு, கம்பளிப் பூச்சி, கிட்டிப்புள், பனங்காய் வண்டி, குச்சிமிட்டாய், காட்டு நரியும் வீட்டு நாயும் - என பல்சுவைப் பாடல்களை அள்ளித் தருகிறது.
"பாப்பா நீயும் தெரிந்து கொள்ளு' என்று கூறி இலைகளின் வகைகளைப் பாட்டாகப் பட்டியலிடுகிறது ஒரு பாடல். தாய் சொன்னா கேட்க வேண்டும் என்று கூறும் "யானைக் குட்டி' கதைப்பாடலும், "தவளையும் வாத்தும்' கதைப் பாடலும் படிக்கத் திகட்டாதவை.
தெனாலிராமன் கதைகள் - நண்டு மாமா; பக்.128; ரூ.55; தென்றல் நிலையம், 12 பி. மேல சந்நிதி, சிதம்பரம்- 608 001. 04144-230069.
தன் நகைச்சுவை உணர்வால் சிறுவர் முதல் பெரியோர் வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த கதைகள் தெனாலிராமன் கதைகள்தாம். தெனாலிராமன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நகைச்சுவையோடு கூடிய அறிவுப் புதையல்கள்.
சிறு வயதிலேயே பல குறும்புகளைச் செய்து எல்லோரையும் சிரிக்க வைத்த ராமன், பிற்காலத்தில் தன்னுடைய மதிநுட்பத்தாலும், நகைச்சுவையாலும் அரசர் கிருஷ்ணதேவராயரிடம் அமைச்சராக விளங்கியவர். தெனாலி சிறுவயதிலிருந்தே நகைச்சுவை உணர்வுடன் இருக்கக் காரணம், அவர் காளி தேவியின் அருளும் ஆசியும் பெற்றதுதான். அதுமட்டுமல்ல... காளி தேவியையே சிரிக்க வைத்தவர்.
கொட்டாவியும் தும்மலும், குட்டி போடும் பாத்திரங்கள், கத்தரிக்காய் பிரச்னை, நாய் வாலை நிமிர்த்து, தெனாலிராமன் பூனை முதலிய கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை. மொத்தம் 23 கதைகள் உள்ளன. வாங்கிப் படித்து வயறு குலுங்கச் சிரியுங்கள்...