எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
எருதும் பசுவும் இளங்கன்றும்
தங்கத் தமிழில் தான்பேசும்
தமிழில் "அம்மா' என்றழைக்கும்!
பாப்பா உரைத்த முதல்வார்த்தை
பச்சைத் தமிழில் "அம்மா'தான்
மூப்பால் வாடும் தாத்தாவின்
முனகல் தமிழில் "அம்மா'தான்!
நாமெல் லோரும் தமிழர்தாம்
நல்ல தமிழைக் கற்றிடுவோம்
ஆமென் றிங்கே உரைத்திடுவாய்
அன்னைத் தமிழை வணங்கிடுவாய்!
தூய தமிழில் பேசிடுக
தொல்காப் பியத்தைக் கற்றிடுக
தீய வாழ்வை நீக்குதற்குத்
திருக்கு றளையே தெளிந்திடுக!
ஆய கல்வி அனைத்தையுமே
அழகு தமிழில் பயின்றிடுக
தாய வட்கும் மேலாகத்
தமிழைப் போற்றி வணங்கிடுக!
சாத னைகள் செய்தவன்தான்
சங்கத் தமிழன் என்றறிக
ஆத லால்உன் உயிர்ப்பெல்லாம்
அன்னைத் தமிழால் என்றுணர்க!