குழந்தைகளே நலமா?
நான்தான் மாதுளை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் "பியூனிகா கிராண்டம்' என்பதாகும். நான் லைத்ராசியே குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் சிறு மர இனத்தைச் சேர்ந்த பழ மரமாவேன். என் தாயகம் பெரிசியா தற்போதைய ஈரான். ஈரானை அடுத்து அதிக அளவில் மாதுளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. மாதுளை உற்பத்தி மஹராஷ்டிராவில் 77 சதவீதம் நடைபெறுகிறது.
உலக நாடுகளில் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் மாதுளை அதிகம் விளைகின்றன. என்னை ஆங்கிலத்தில் "பொமிகிரேனட்' என்று அழைப்பாங்க. சிரிக்கும் சிவந்த முத்துக்களை உடைய எனக்கு, பனிக் காலமும், வறண்ட கோடையும்தான் செழித்து வளர்ந்து பலன் தர ஏற்ற சூழ்நிலைகளாகும்.
குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா? ஒரு பழத்தில் பல விதைகள் இருந்தால் அவை ஆங்கிலத்தில் "பெர்ரி' என்று அழைக்கப்படும். எனவே, நானும் பெர்ரி வகை பழ, சிறு மரமாவேன். வறட்சியைத் தாங்கி வளருவேன். "வெடித்து வீழ் படித்தை வாங்கி மெல்லிய சீலைக்கட்டி, கடுக்கென பிழிந்துகொண்டு கண்டதற்கிணங்க கூட்டிக் குடித்திட வெப்புங்மாறு குளிந்திடு மங்கமெல்லாம் வடித்தநன் மொழியினாளே மாதுளம் பழத்தின் சாறே' எனும் பழம் பாடல் மாதுளம் பழத்தின் சாறை அருந்தினால் உடல் முழுவதும் குளிச்சி அடையும் என்கின்றது.
குழந்தைகளே, என் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கு. எனவே, நான் ஒரு சிறந்த நோய் தடுப்பான் ஆவேன். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழச்சாறு அருந்தினால், காய்ச்சல் சட்டென குணமாகும். உங்கள் ஆற்றல் கூடும், மேலும் அவை வைரஸ் கிருமிகளை அழித்து, புத்துணர்ச்சியைத் தரும். குடல்புண், வயிற்றுப் புண்களையும் என் பழச்சாறு குணமாக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் என் பழத்தை தினமும் உண்டு வந்தால் அவர்களுக்குப் புதிய சக்தி பிறக்கும். எப்படி என்றா கேட்கறீகள்? என் பழத்திற்கு உங்கள் உடம்பில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் இருக்கு.
என் பழத்திலுள்ள "எல்லஜிக்' அமிலம் சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும். உடலில் "நைட்ரிக் ஆக்சைட்' எனும் தனிமம் குறையும்போது, மன அழுத்தம் ஏற்படும். என் பழம் "நைட்ரிக் ஆக்சைடு' அளவை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது என்பதால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாது. என் விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கிறாங்க. இந்த எண்ணெய்யைக் காயங்கள் மீது தடவினால் விரைவில் குணமாவதுடன், தழும்புகளும் மறையும். என் பழச்சாறை தலையில் தடவி வந்தால் முடி கருமையாவதுடன், கரு கருவென்று வளரும்.
என் பழத்தில் "ஆந்தோசயின்கள் டானின்கள்' மற்றும் "ஆக்ஸிஜனேற்றங்கள்' உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், உங்கள் சருமம் பளபளப்பாக மாற உதவுகிறது. ஒரு ஸ்பூன் மாதுளச் சாறு மற்றும் சந்தனத்தைக் கலந்து முகத்தில் பூசி, பின் நீரில் கழுவினால் உங்கள் முகம் பளபளப்பாக மாறும். ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தகர் மலைப் பகுதிகளில் விளையும் மாதுளைதான் தரத்தில் மிகவும் உயர்ந்தது. உங்கள் வயோதிக தன்மையைத் தள்ளிப்போடும் சக்தியும் எங்கிட்ட இருக்கு.
மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)