ஒரு வீட்டின் வாசலில் பட்டுப்போன மரம் ஒன்று நெடுநாள்களாக இருந்தது. ஒரு நாள் அந்த வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன், வீட்டு சொந்தக்காரரிடம் "பட்டுப்போன மரத்தை வைத்திருப்பது வீட்டுக்கு நல்லதல்ல... அதை உடனே வெட்டிவிடுங்கள்' என்றான்.
அந்த வீட்டுக்காரனும் வழிப்போக்கன் சொன்னபடி மரத்தை அன்றே வெட்டி வீழ்த்தினான். மரம் வெட்டும்வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்த வழிபோக்கன், வெட்டிய மரத்தை இரவோடு இரவாக சிறு சிறு விறகுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
மறுநாள் காலையில் வீட்டு வாசலில் வெட்டிப்போட்ட மரம் இல்லாததைக் கண்டு திகைத்தார் வீட்டுக்காரர். "வழிப்போக்கன் சொன்னதை ஆராய்ந்து பார்க்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு. நம் வீட்டு அடுப்புக்குக்கூட அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இதுநாள் வரை இருந்து விட்டோமே... எங்கிருந்தோ, எவனோ வந்து அதைக் கொண்டு போய்விட்டானே...' என வேதனைப்பட்டான்.
நீதி: அறிவுரையை ஏற்கும் முன், அதைச் சொல்வது யார்? அவருக்கு அதனால் ஏதேனும் ஆதாயம் உண்டா... என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கப் பழக வேண்டும்.