அறிவுடையார் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளார்
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும் சீர்ந்தது செய்யாதா ரில். (பா-67)
வெற்றியை உடைய கருடன் மீது ஏறி வீற்றிருந்து, உலகத்தைத் தாவியளந்த பெருமை பொருந்திய திருமாலே யாயினும், தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை. (ஆகையால்) அறிவிற் சிறந்தோர், உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று, மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் அவருள் ஒருவரையும் தெளிதல் இலர். (க-து) மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் யாவராயினும் நம்புதல் கூடாது. "சீர்ந்தது செய்யதார் இல்' என்பது பழமொழி.