பழமொழி நானூறு
பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல். (பா-92)
இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே தலைவனாய அரச பதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்) பயன் அடையாதார் இல்லை. (க-து) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன் பெறுவர் என்பதாம். "பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.