பழமொழி நானூறு
மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
செய்யா ரெனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை. (பாடல்-109)
கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்! உண்மையாக ஆராயின், உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது? ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள், குறித்த ஒரு பருவ காலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வது மழையேயாதலான். "பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை' என்பது பழமொழி.